மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் பகுதிகளில் பா.ஜனதா சிறுபான்மை பிரிவு பிரசாரத்திற்கு அனுமதி கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு




பா.ஜனதா சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் மற்றும் நிர்வாகிகள் புதுக்கோட்டையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவை நேற்று சந்தித்து மனு அளித்தனர். அதில் மத்திய அரசு சிறுபான்மையினருக்காக செய்த நலத்திட்டங்கள் குறித்து மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் பகுதியில் பா.ஜனதா சிறுபான்மை பிரிவு சார்பில் பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரி தெரிவித்திருந்தனர். மேலும் வேலூர் இப்ராகிம் நிருபர்களிடம் கூறுகையில், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் பகுதியில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம் மக்களை சந்தித்து சிறுபான்மையினருக்காக மத்திய அரசின் 14 திட்டங்கள் பற்றி பிரசாரம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது. கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சில அமைப்பினர் மிரட்டல் விடுக்கின்றனர். அவர்களை கைது செய்வதை விட்டு, என்னை அங்கு செல்லவிடாமல் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கூறி முன்னெச்சரிக்கையாக கைது செய்கின்றனர். அங்கு சென்று தேசிய கொடியையும், கட்சி கொடியையும் ஏற்றுவோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தாமரை வெல்லும். பயங்கரவாத சக்திகளை போலீசார் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. கோவையில் நடந்ததை போல் கோட்டைப்பட்டினம் வரை கொண்டு வர, அரசியல் லாபத்திற்காக முயற்சி நடக்கிறதோ? என்பது தான் எங்கள் கேள்வி. ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்காமல் எங்களது பிரசாரத்திற்கு அனுமதி அளியுங்கள். அனுமதி அளிக்காவிட்டால் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மரண அடி தருவார்கள். நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம். தீவிரவாத அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments