ஆஸ்பத்திரியில் குவியும் நோயாளிகள்: தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் தமிழ்நாட்டில் 1,000 இடங்களில் மருத்துவ முகாம் 10-ந் தேதி நடைபெறுகிறது




தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். இந்த காய்ச்சல் மிக தீவிரமாக இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.

வைரஸ் காய்ச்சல்

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கடுமையான உடல் வலி, தொண்டை வலி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

இதுதொடர்பாக ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. அதன்படி இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் சளி மாதிரிகள் நாடு முழுவதும் உள்ள ஐ.சி.எம்.ஆரின் 30 ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த பரிசோதனையில் தற்போது வேகமாக பரவி வருவது ‘இன்புளூயன்சா ஏஎச்3என்2’ வகை வைரஸ் என தெரியவந்துள்ளது.

7 நாட்கள் நீடிக்கும் காய்ச்சல்

கடந்த டிசம்பர் 15-ந் தேதி முதல் தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த வகை வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் ‘இன்புளூயன்சா ஏஎச்3என்2’ வைரசால் பாதிக்கப்படுவோருக்கு இருமல், தொண்டை வலி, உடல் வலி, மூக்கில் சளி ஒழுகுதல், வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. காய்ச்சல் பாதிப்பு 7 நாட்கள் வரை நீடிக்கிறது.

அதிகம் பாதிக்கும் சிறுவர்கள்

50 வயதுக்கு மேற்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இந்த வகை வைரசால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசுவும் இந்த வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மற்ற ‘இன்புளுயன்சா’ காய்ச்சல் போல் அல்லாமல் இந்த வைரசின் பாதிப்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அளவுக்கு தீவிரமாக உள்ளது.

வழக்கமாக பருவகாலம் மாறும்போது இதுபோன்ற காய்ச்சல் ஏற்படும். இந்த காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்கு இருக்கும். 2 முதல் 3 வாரங்களுக்கு இருமல் இருக்கும். இந்த வைரஸ் பாதிப்பு சற்று தீவிரமாக உள்ளது.

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுவது, முக கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது. வெளி இடங்களுக்கு சென்று வந்த பின்பு கைகளை கழுவாமல் கண் மற்றும் மூக்கை தொடக்கூடாது. நாம் சந்திக்கும் நபர்களிடம் பரஸ்பரம் கை கொடுத்தல் கூடாது.

இந்தவகை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில் 10 சதவீதத்தினருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. 7 சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் வகையில் பாதிக்கப்படுகின்றனர். சளி, காய்ச்சல், உடல்வலி இருந்தால் உடனடியாக டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும். டாக்டரின் பரிந்துரை இல்லாமல் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் திரவ உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரியில் குவியும் நோயாளிகள்

நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் மிக வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்சலால் தினந்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்படுவதால் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.

அதே வேளையில் இந்த காய்ச்சல், பாதிக்கப்பட்டவர்களை பாடாய் படுத்தி விடுவதால் பொதுமக்கள் மத்தியில் இந்த வைரஸ் காய்ச்சல் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், வருகிற 10-ந்தேதி 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் முகாம்

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். அதில் சென்னையில் 200 இடங்களில் நடைபெறும். காய்ச்சல் தொற்று அதிகம் கண்டறியப்படும் இடங்களில் நடமாடும் ஆஸ்பத்திரிகளை கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.காய்ச்சல் முகாம் காலை 9 மணிக்கு தொடங்கி தேவைக்கேற்ப நடைபெறும். இந்த முகாம்களில் ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு ஆய்வக நுட்பனர் மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார்கள். குளிர்காலம் மற்றும் பருவ மழை காலம் நிறைவடையும்போது ஏற்படும் காய்ச்சல் இது. இதன் அறிகுறிகள் உடல் வலி, தொண்டை வலி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் ஆகும்.

10-ந்தேதி நடக்கிறது

முதியவர்கள், குழந்தைகள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தவறாமல் இந்த முகாமை அணுகி பரிசோதித்து, தேவைக்கேற்ற சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இந்த முகாம்களில் தேவையான மருந்து, மாத்திரைகள் உள்ளன.பொதுவாக மக்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முககவசம் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற அம்சங்களினால் நமக்கு ஏற்படும் கிருமி தொற்றிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.எனவே வருகிற 10-ந்தேதி நடைபெறும் காய்ச்சல் முகாமில் தங்களை பரிசோதித்துக் கொண்டு தேவை இருப்பின் சிகிச்சை பெற்று நலமுடன் வாழ கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments