சாகர்மாலா திட்டத்தில் இராமேஸ்வரம் 2 இடங்கள் உள்பட தமிழ்நாட்டில் 4 பகுதிகளில் மிதக்கும் கப்பல்தளங்கள் மத்திய அரசு அனுமதி




ராமேசுவரத்தில் 2 இடங்கள் உள்பட 4 பகுதிகளில் மிதக்கும் கப்பல்தளங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

சீர்திருத்தங்கள்

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம், நாட்டின் சமூக பொருளாதார சூழலை வலுப்படுத்த சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், கடல்சார் தொழில்துறையை மேம்படுத்த ஏராளமான சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக பழமையான முறையில் நிரந்தர கப்பல் இறங்கு தரைகளை அமைப்பதற்கு பதிலாக தனித்துவமான மிதக்கும் தளங்களை உருவாக்க அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த மிதக்கும் இறங்கு தளங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும், நவீனத்துவம் மிக்கதாகவும், நீண்ட காலம் உழைக்கக் கூடியதாகவும் உள்ளன.

இதுவரை சாகர்மாலா திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் மொத்தம் 11 மிதவை இறங்கு தளங்களை அமைக்க அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த தளங்கள் குருபுரா, நேத்ராவதி ஆறுகளில் அமைக்கப்பட்டு சுற்றுலா நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும்.

தமிழகத்தில் 4 தளங்கள்

இதைப்போல தமிழ்நாட்டில் 4 மிதவை இறங்கு தளங்களுக்கு கொள்கை அடிப்படையில் அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆன்மிக தலமான ராமேசுவரத்தில் அக்னிதீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம் ஆகிய இடங்களில் 2 தளங்கள் அமைக்கப்பட உள்ளன.

மேலும் கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய இடங்களிலும் இந்த இறங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த மிதவை இறங்கு தளங்கள் சுற்றுலா பயணிகள் தடையின்றி, பாதுகாப்பாக போக்குவரத்தை மேற்கொள்ளவும், கடலோர சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த மேம்பாட்டைக் கருத்தில் கொண்டும் அமைக்கப்பட இருக்கிறது.

சுற்றுலா-வேலைவாய்ப்பு

இது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை மந்திரி சர்பானந்த சோனோவால், “வலுவான இணைப்புகளை வழங்குவதற்கு நமது பிரதமர் உயர் முக்கியத்துவம் அளித்து வருகிறார். இது இந்தியாவுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். மிதவை இறங்கு தளங்களை அமைப்பது, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பெரிதும் வழிவகுப்பதுடன், நீர் தொடர்பான சுற்றுலாவுக்கு புதிய வழிகளையும் உருவாக்கும். இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், அந்த பிராந்தியத்தின் வர்த்தகமும் அதிகரிக்கும்” என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments