புதுக்கோட்டை மாவட்டத்தில் குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி




புதுக்கோட்டை மாவட்டத்தில் குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வண்டல் மண்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில் உள்ள 1,351 கண்மாய் மற்றும் குளங்களில் விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள், மண்பாண்டம் செய்யும் கூட்டுறவு சங்கம் ஆகியோர் இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண்ணை எடுத்து பயன்படுத்தலாம்.

வண்டல் மண் பெறும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்திலோ அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்திலோ வசிக்க வேண்டும். விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அடங்கல் மற்றும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குனருக்கு (கனிமம் மற்றும் சுரங்கம் பிரிவிற்கு) அனுப்பி அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

சேமித்து வைக்க கூடாது

நன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 75 கனமீட்டர், ஹெக்டேருக்கு 185 கனமீட்டர், புன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 90 கனமீட்டர், ஹெக்டேருக்கு 222 கனமீட்டர், மண்பாண்டம் செய்ய 60 கனமீட்டர் என்ற அளவிற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். வண்டல் மண் எடுக்கும் போது குளத்தின் கரையின் உயரத்தின் 2 மடங்கு தொலைவில் சம்பந்தப்பட்ட பொறியாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வண்டல் மண் அள்ள வேண்டும். ஒரு மீட்டர் ஆழத்திற்கு மேல் மண் அள்ளக்கூடாது. மேலும் குளத்தின் கரையை பாதையாக பயன்படுத்தக்கூடாது. குளத்தின் கரையின் குறுக்கே குறுக்கு பாதைகள் ஏற்படுத்தக்கூடாது.

வண்டல் மண்ணை எக்காரணம் கொண்டும் சேமித்து வைக்க அனுமதி இல்லை. வண்டல் மண் எடுக்கும் போது கரை, மதகு அல்லது கட்டுமான வேலைப்பாடுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்தக்கூடாது. டிராக்டரில் மட்டுமே வண்டல் மண் எடுத்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments