கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் பெயரில் கல்வெட்டு மாற்றி அமைக்கப்படுவது எப்போது? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு!!



கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் பெயர் மாற்றம் என்பது நமது அடுத்த தலைமுறைக்கு தவறான முன் உதாரணமாக மாறி விடக்கூடாது என்பதற்காக இதை விரைவில் செய்து தருவார்கள் என்ற நம்பிக்கையோடு இதை நினைவு படுத்தி சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

கோபாலப்பட்டிணத்தில் 53-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற பழமை வாய்ந்த ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா வருகின்ற மார்ச் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதே சமயம் வருகின்ற மார்ச் 11-ஆம் தேதி புதிய கட்டிடமான நூருல் அய்ன் கட்டிடத்தில் சிறப்பு பயான் நிகழ்ச்சியுடன் புதிய கட்டிடத்தில் இரண்டாவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. 

இந்த தருனத்தில் அதன் வரலாறு குறித்து  நினைவு படுத்துவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். 

"வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது” என்ற மால்கம் எக்ஸ் என்ற அமெரிக்க இஸ்லாமிய அரிஞன் சொல்லுக்கிணங்க வரலாற்றை நினைவு படுத்த விரும்புகின்றோம். 

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கிராமத்தில் கடந்த 08.03.1970 முதல் 12.05.2022 வரை ரஹ்மானியா பெண்கள் மதரஸா கட்டிடம் சார்ந்த வக்பு விபரங்களை நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.

கோபாலப்பட்டிணம் ஆன மண்டை குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம்.செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களின் மகனும், மர்ஹூம்.மு.செ.முஹம்மது அலியார் அவர்களின் மனைவி ஷம்சுன்னிசா ஹாஜிமா அவர்களின் தந்தையாருமான மர்ஹூம்.ஹாஜி.மு.செ.மு.முஹம்மது ஹனீப் ஆலிம் அவர்களால் சொந்த இடத்தில் சொந்த செலவிலேயே கட்டி ரஹ்மானியா பெண்கள் மதரஸா என்ற பெயரில் கடந்த 08.03.1970 அன்று வக்பு செய்யப்பட்டது.

அடுத்த சில ஆண்டுகளில் குழந்தைகள் அதிகமாகி இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் இடத்தினை விரிவுபடுத்த திட்டமிட்டு அருகில் இருந்த அடுத்தடுத்து இடங்களான சிங்கப்பூர் ஜவுளி ஸ்டோர் உரிமையாளர் மர்ஹூம்.சாகுல் ஹமீது அவர்களுடைய தந்தை மர்ஹூம்.ஹபீப் முஹம்மது அவர்களிடம் கொஞ்ச இடமும், சுரக்கப்பா என்கிற ஷாஹுல் ஹமீது என்பவரது பேரன் ஜனாப்.ரபீக் அவர்களிடமிருந்து கொஞ்ச இடமும் ஊர் ஜமாத்தினரால் சலுகை விலையில் வாங்கி பழைய மதரஸா கட்டிடத்துடன் இணைக்கப்பட்டது.
நூருல் அய்ன் பெண்கள் மதரஸா என்று கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்

ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ரஹ்மானியா பெண்கள் மதரஸா முழுமையாக பழுதடைந்து விட்டதால் அதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட ஊர் ஜமாத் சார்பாக முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் இந்த நூருல் அய்ன் என்ற புதிய கட்டிடத்தை நமது ஊரை சேர்ந்த மர்ஹூம்.ஹாஜி.மு.மு.நஸ்ருதீன்-நூர்ஜஹான் தம்பதியர் மகன் ஹாஜி.மு.மு.ந.ஜாபர் சாதிக்  அவர்களால் சொந்த செலவில் கட்டி ரஹ்மானியா பெண்கள் மதரஸாவுக்கு கடந்த 12.05.2022 அன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்த மதரஸா பணி துவங்கிய நாள் முதல் இதற்காக சேவையாற்றிய, சேவை செய்து கொண்டிருக்கின்ற, இனி யுக முடிவு நாள் வரை சேவையாற்ற இருக்கின்ற அனைவரையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டு நற்கூலியை வழங்கி அவர்களின் பாவங்களையெல்லாம் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவனத்தை வழங்கி இந்த மதரஸா கியாம நாள் வரை இயங்க அருள் புரிவானாக ஆமீன்.

முக்கியமாக இந்த தருணத்தில் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றோம்:

பழைய கட்டிடம் இருந்த வரையில் ரஹ்மானியா பெண்கள் மதரஸா என கல்வெட்டும் மற்றும் சுவற்றிலும் பெயர் எழுதப்பட்டிருந்தது. ஆனால் புதிய கட்டிடம் கட்டிய பிறகு ரஹ்மானியா பெண்கள் மதரஸா என்ற பெயர் கல்வெட்டிலோ அல்லது சுவற்றிலோ எழுத படாமல் மறைக்கப்பட்டு, புதிய கட்டிடத்திற்கு நூருல் அய்ன் பெண்கள் மதரஸா என்ற கல்வெட்டுகள் வைக்கப்பட்டது. இதுகுறித்து அப்பொழுது ஊர் நிர்வாகத்தினர் மற்றும் சம்மந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் கேட்ட பொழுது இந்த புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்வு முடிந்த பிறகு நூருல் அய்ன் பெண்கள் மதரஸா என்ற கல்வெட்டுகள் அகற்றப்பட்டு ரஹ்மானியா பெண்கள் மதரஸா என்று முன்பிருந்தது போலவே மாற்றி அமைத்து தந்து விடுவதாக ஊர் நிர்வாகத்தினர் மற்றும் சம்மந்தப்பட்ட பொறுப்பாளர்கள் வாக்குறுதி அளித்தனர். அந்த வகையில் வாக்குறுதி அளிக்கப்பட்டு சுமார் ஒன்பது மாதங்கள் கடந்த நிலையில் அதன் பொறுப்பாளர்கள் இன்னும் கண்டு கொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்க விஷயமாக உள்ளது. மேலும் நமதூரின் தனிப்பட்ட வரலாறுகள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக இதை விரைவில் செய்து தருவார்கள் என்ற நம்பிக்கையோடு இதை நினைவு படுத்துகின்றோம்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆண்டு விழா அழைப்பிதலில் ரஹ்மானியா பெண்கள் மதரஸா என்று மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் ரஹ்மானியா பெண்கள் மதரஸா என்று அழைப்பிதலில் அச்சிடப்பட்டுள்ளதே தவிர புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் எந்த இடத்திலும் கல்வெட்டு வைக்கப்படாமல் முன்பு இருந்த பெயர் மறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments