மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்குகிறது 61 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள்




மீன்பிடி தடைக்காலம் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதனால் 61 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல மாட்டார்கள்.

மீன்பிடி தடைக்காலம்

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுவதால் மீனவர்கள் விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் நாளை (சனிக்கிழமை) முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

வியாபாரம் குறையும்

இந்த மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகினை கரையில் ஏற்றி விசைப்படகில் உள்ள சிறிய சிறிய பழுதுகளை சரி செய்யும் வேலையில் ஈடுபடுவார்கள். மேலும் விசைப்படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கும் வேலையிலும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் விசைப்படகு துறைமுகத்தை ஒட்டி சிறு வியாபாரிகள் உள்ளனர். தடைக்காலம் ஆரம்பித்ததால் அவர்களுக்கு வியாபாரம் குறைய தொடங்கி விடும்.

சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்

முன்னதாக நேற்று கடைசியாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பினர். அப்பொழுது மீன்களை வாங்க வெளியூரிலிருந்து ஏராளமான வியாபாரிகள் விசைப்படகு துறைமுகத்தில் குவிந்தனர்.

இந்த பகுதியில் காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். தடைக்காலம் தொடங்கி விட்டதால் மீனவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments