புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் எந்திர வசதி அறிமுகம்




புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் எந்திர வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

புதுக்கோட்டை ரெயில் நிலையம் மிகவும் பழமையானதாகும். புதுக்கோட்டை வழியாக தினமும் 20-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ரெயில் நிலையத்திற்கு தினமும் பயணிகள் வந்து செல்லும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நீண்ட தூரம் பயணிக்க கூடிய வட மாநில ரெயில்கள், சென்னை செல்லும் பல்லவன், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகம்.

பயணிகள் மூலம் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வருவாய் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், புதிய கட்டமைப்புகளை உருவாக்குதல் என மேம்பாட்டு பணிகள் அம்ரித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.

தானியங்கி டிக்கெட் எந்திரம்

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தற்போது முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் வினியோகத்திற்கு கவுண்ட்டர் ஒரே இடத்தில் செயல்படுகிறது. இதில் முன்பதிவு டிக்கெட் எடுக்க பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். சில நாட்கள் கவுண்ட்டரில் ஒரே ஒரு ஊழியர் மட்டுமே இருந்து டிக்கெட் வினியோகிப்பார். இதனால் காலதாமதம் ஏற்படும். கவுண்ட்டரில் உள்ள அவரிடம் ரெயில்கள் விவரம் பற்றி கூட கேட்க முடியாத சூழல் உண்டு.

இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் எந்திர வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கியூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து செயலியில் பணம் செலுத்தி முன்பதிவில்லா டிக்கெட் பெற முடியும். இதேபோல நடைமேடை டிக்கெட் பெறலாம். ஸ்மார்ட் கார்டு ரீசார்ஜ் செய்ய முடியும். இதுதவிர ரெயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு விவரம், காலி இருக்கைகள் விவரம், ரெயில்கள் விவரம், ரெயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களை இந்த தொடுதிரையில் அறியலாம். பயணிகளுக்கு இந்த எந்திரம் பயனுள்ளதாக உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments