தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்




தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அனேக இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. சென்னையிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை எட்டிப்பார்த்தது. இந்தநிலையில் தமிழகத்தில் 4 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில்...

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 26, 27-ந் தேதிகளில் (இன்றும், நாளையும்) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28, 29-ந் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் பில்லிமலை எஸ்டேட், கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. திருச்செந்தூர், மேட்டுப்பட்டி, அடார் எஸ்டேட், வத்திராயிருப்பு, குன்னூர், சாம்ராஜ் எஸ்டேட், பஞ்சப்பட்டி, கோத்தகிரியில் தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments