நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் குறைவான மக்களே கலந்து கொண்ட கிராமசபை கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்! சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!




நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் குறைவான மக்களே கலந்து கொண்ட கிராமசபை கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 6(3) -ன் படி கிராம சபை கூட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் கூட்ட வேண்டும். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 46(1)(a) ன் படி கிராம சபை கூட்டத்தை கூட்டுவது ஊராட்சி மன்ற தலைவரின் அலுவல் ஆகும். இதற்காக ஊராட்சி மன்ற தலைவருக்கு மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.

கிராம சபை கூட்டம் தொடர்பான அறிவிப்பு, கிராம சபை கூட்டம் கூடுவதற்கு 7 நாட்களுக்கு முன்னதாக பொதுமக்களுக்கு கிராம ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட வேண்டும். துண்டு பிரசுரங்கள், பிளக்ஸ் பேனர், தண்டோரா போன்ற வகைகளில் கிராம சேவை தொடர்பான கூட்ட அழைப்பு பொதுமக்களுக்கு கிராம ஊராட்சி மூலமாக வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் மற்றும் விதிகள் அரசாணைகள் மூலமாக ஊராட்சியின் செயல் அலுவலரான ஊராட்சி மன்ற தலைவர் பணியாகும். 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் அறிவித்துள்ள விதிகள் எதுவும் பின்பற்றவில்லை. குறிப்பாக கிராம சபை கூட்டம் கூடுவதற்கு ஒரு நாட்களுக்கு முன்னதாகத்தான் துண்டு பிரசுரம் அடித்து வெளியிடப்பட்டது. மேலும் முறையாக மக்களுக்கு  தண்டோரா மூலமாகவும், துண்டு பிரசுரம் வழங்கியோ அறிவிப்பு செய்யவில்லை.கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் கிராம சபை கூட்டத்திற்கான செலவின வரம்பினை ரூ. ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் தொழிலார் தினமான நேற்று 01/05/2023 நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் அமைந்திருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ஊராட்சி மன்ற தலைவர் சீதாலெட்சுமி தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் 50-க்கும் குறைவான மக்களே கலந்து கொண்டனர். இதில் அங்கன்வாடி ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் அடங்குவர். மேலும் முறையாக வரவு, செலவு கணக்குகள் படிக்கப்படவில்லை என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

குறைவான மக்கள் கலந்துகொள்ள காரணம் என்ன என்று விசாரிக்கையில் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் சரியான விழிப்புணர்வு மற்றும் சரியான முறையில் அறிவிப்பு செய்யாததால் மக்கள் கலந்து கொள்ளவில்லை என கூறுகின்றனர்.

மேலும் கிராமசபையை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் 8 வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்து உள்ளனர். 12 வார்டு கொண்ட உறுப்பினர்களில் 4 உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு பனி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஏன் கிராமசபையை புறக்கணித்தனர் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கிராம பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 பேர் என்றால் குறைந்தபட்சம் 50 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் அந்த கிராமசபை நடந்ததாக ஏற்றுக்கொள்ளப்படும். அதேபோல் கிராம பஞ்சாயத்தின் மக்கள் தொகை 501 முதல் 3000 வரை என்றால் 100 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். 3001 முதல் 10 ஆயிரம் பேர் கொண்ட கிராமத்தில் 200 பேரும், 10,000 மேற்பட்ட மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என அரசாணை நிலை எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை நாள் (259 2006) கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் அரசாணையில் கூறப்பட்டுள்ளது போல் 300 பேர் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் நேற்று 01/05/2023 நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் குறைவான குறைவெண் கொண்ட மக்களே கலந்து கொண்டுள்ளனர். ஆகையால் இந்த கிராமசபை கூட்டத்தை ரத்து செய்து விட்டு, உரிய முறையில் மக்களுக்கு அறிவிப்பு செய்து வார்டு சுழற்சி முறையில் மற்றொரு தேதியில் நடத்த ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் வார்டு சுழற்சி முறை பின்பற்றப்படுவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் மொத்தம் 12 வார்டு இருக்கிறது. அதில் 6 வார்டுகளை கொண்டது கோபாலப்பட்டிணம் ஆகும். இதில் கோபாலப்பட்டிணம் 2-வது வார்டு பகுதியான அவுலியா நகர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும் மற்றும் முத்துகுடாவிலும் வார்டு சுழற்சி முறை பின்பற்றப்படாமல் அதிகமான கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கோபாலப்பட்டிணத்தில் பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகிலும், கடற்கரை பள்ளிவாசல் அருகில் உள்ள ஆலமரம் அருகிலும், பழைய காலனி பகுதியிலும் மற்றும் சின்னப்பள்ளிவாசல் அருகிலும் வார்டு சுழற்சி முறையில் கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments