கடற்கரை பகுதிகளில் கடல் பாசிகளை காய வைக்க களம் அமைக்க நடவடிக்கை




கடற்கரை பகுதிகளில் கடல் பாசிகளை காய வைக்க களம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.

கடற்கரை பகுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 42 கிலோ மீட்டர் தூரம் கடற்கரை பகுதியாகும். கட்டுமாவடி முதல் ஏனாதி வரை 32 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் விசைப்படகு, நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர கடல் பாசிகள் வளர்ப்பிலும் சிலர் ஈடுபடுகின்றனர்.

கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் பாசி வளர்ப்பு தொழிலில் அதிகம் ஈடுபடுகின்றனர். கடல் பாசிகளை தனியார் நிறுவனத்தினர் மொத்தமாக கொள்முதல் செய்து உணவுப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள் தயாரிக்க மூலப்பொருட்களில் ஒரு பகுதியாகவும் பயன்படுத்துகின்றனர். இதில் கடல் பாசியை திரவமாகவும், பொடியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சிமெண்டு தளத்தலான களம்

இந்த நிலையில் கடல் பாசிகளை கடல் தண்ணீரில் இருந்து எடுத்து வந்து கரையில் மணற்பரப்பில் காய வைப்பது உண்டு. அதனை மணற்பரப்பில் காய வைப்பதற்கு பதிலாக கடற்கரை பகுதியின் அருகே சிமெண்டு தளம் போன்ற களம் அமைத்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என கடல் பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் களத்தில் காய வைக்கப்படும் போது கடல் பாசியில் மணல் ஒட்டாத நிலை காணப்படும். அதன் தரம் மேலும் உயரும் போது விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே களம் அமைத்து தர அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர்களது கோரிக்கைகளை ஏற்று கடல் பாசிகளை காய வைக்க அரசு தரப்பில் இருந்து களம் அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக எந்த இடத்தில் களம் அமைப்பது என ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments