தாம்பரம், பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கல்லிடைக்குறிச்சி, கீழக்கடையத்தில் நின்று செல்ல வேண்டும் ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தல்





நெல்லை தொகுதி எம்.பி. ஞானதிரவியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

செங்கோட்டை- தாம்பரம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:-20683/20684) கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் வருகிற ஜூன் மாதத்தில் இருந்து வாரம் மும்முறை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கல்லிடைக்குறிச்சி, கீழக்கடையம் ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். மேலும் இந்த ரெயிலுக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்ட வேண்டும். அதேபோல் நெல்லை-பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் (16791/16792) கல்லிடைக்குறிச்சி, கீழக்கடையம், பாவூர்சத்திரம் ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். இதற்காக பலமுறை ரெயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை செவிசாய்க்கவில்லை.

கல்லிடைக்குறிச்சி பெரிய பேரூராட்சி ஆகும். கீழக்கடையம் பெரிய விவசாய பகுதியாகும். இப்பகுதி மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். எனவே செங்கோட்டை-தாம்பரம் ரெயில் கல்லிடைக்குறிச்சி, கீழக்கடையத்திலும், பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் கல்லிடைக்குறிச்சி, கீழக்கடையம், பாவூர்சத்திரத்திலும் நின்று செல்ல வேண்டும்.

இல்லையெனில் அடுத்த மாதம் (ஜூன்) மேற்கண்ட ரெயில்கள் இயக்கப்படும்போது எனது தலைமையில் பொதுமக்களை திரட்டி மறியல் செய்ய நேரிடும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments