குறுவை சாகுபடிக்காக 1,312 மெட்ரிக் டன் உர மூட்டைகள் சரக்கு ரெயிலில் புதுக்கோட்டை வந்தது




புதுக்கோட்டை மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்காக 1,312 மெட்ரிக் டன் யூரியா உரம் சரக்கு ரெயிலில் புதுக்கோட்டை வந்தடைந்தது.

உர மூட்டைகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது பெறப்படும் மழையினை தொடர்ந்து நீர் நிலைகளில் நீர் இருப்பினை பயன்படுத்தி விவசாயிகள் நெல், மக்காச்சோளம், கரும்பு, நிலக்கடலை, உளுந்து மற்றும் தோட்டக்கலை பயிர்கள் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் நெல் நடவுப் பணிகளிலும், நெற்பயிருக்கு மேலுரம் இடுவதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்வரும் குறுவை பருவ நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறுவை சாகுபடிக்கு தேவையான யூரியா உரம் 1,312 மெட்ரிக் டன் அளவில் தூத்துக்குடியில் இருந்து கிரிப்கோ நிறுவனத்தின் உரங்கள் சரக்கு ரெயில் மூலம் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தது. உர மூட்டைகள் அனைத்தும் டான்பெட் நிறுவனத்தின் மூலம் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு விவசாயிகள் பயன்படும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டது.

அதிகபட்ச விலைக்கு விற்ககூடாது

எனவே, மாவட்டத்திலுள்ள சில்லரை உர விற்பனையாளர்கள் உரக் கட்டுப்பாட்டு ஆணைப்படி மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் விவசாயிகளின் பார்வையில் படும்படி பராமரிக்கப்பட வேண்டும்.

உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான உரங்களுடன் வேறு சில இடுபொருட்களை இணைத்து வழங்கக் கூடாது. விவசாயிகள் இது குறித்து ஏதேனும் புகார் தெரிவிக்க தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட உரக் கண்காணிப்பு மையத்தை 04322-221666 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

உரிமம் ரத்து செய்யப்படும்

மொத்த உர விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் பிற மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்புவதும், பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதும் கூடாது. உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் இருப்பு வைப்பதும் உரங்களை விற்பனை செய்வதும் கூடாது.

இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments