அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு




தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேர்க்கை உதவி மையங்கள்

2023-ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 24-ந் தேதி முதல் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலமாக பெறப்பட்டு வருகிறது.

விண்ணப்பிக்கும் முறை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்கலாம்

இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், முன்னுரிமை இட ஒதுக்கீட்டிற்கான ஆவணம், இடப்பெயர்வு சான்றிதழ், ஆதார் அட்டை, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, புகைப்படம் -1) வந்து நேரடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

ஆகஸ்டு- 2023 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற்பிரிவுகள், இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன.

ஜூன் 7-ந்தேதி கடைசி

விண்ணப்ப கட்டணம் ரூ.50-ஐ கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்க் வாயிலாக செலுத்தலாம். மேலும் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ் பாஸ், வரைபடக் கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.750- வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 7-ந் தேதி ஆகும். மேலும், விபரங்களுக்கு தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மையம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், புதுக்கோட்டை - 04322-221584, அரசு தொழிற்பயிற்சி நிலையம், விராலிமலை 8667426792 உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், புதுக்கோட்டை, 04322-299382 ஆகிய எண்களில், தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments