மல்லிப்பட்டினம் மனோராவில், உலக கடல்பசு தினத்தையொட்டி, கடல்பசு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்தியாவிலேயே முதல் முறையாக மனோரவில் ரூ.15 கோடியில் கடல்பசு பாதுகாப்பு மையம் அமைகிறது





மனோராவை தலைமை இடமாகக்கொண்டு ரூ.15 கோடியில் கடல்பசு பாதுகாப்பு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.



கடல்பசு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சை மாவட்டம் சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி, மனோரா கடற்கரையில், உலக கடல்பசு தினத்தையொட்டி, கடல்பசு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற பிறகு மனோராவுக்கு முதல்முறையாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் உலக கடல் பசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அபூர்வ வகை கடல்வாழ் உயிரினமான கடல்பசு, கடல் வளத்தை பாதுகாக்கும் முக்கியமான உயிரினமாக திகழ்கிறது.

கடல்பசு பாதுகாப்பு மையம்

இப்பகுதியில் காணப்படும் இந்த அபூர்வ உயிரினத்தை காப்பாற்றும் வகையில் மனோராவை தலைமை இடமாகக்கொண்டு, தமிழ்நாடு அரசு ரூ. 15 கோடி மதிப்பீட்டில் கடல்பசு பாதுகாப்பு மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. கடல்பசுவை காப்பாற்றி உயிருடன் கடலில் விட்ட மீனவர்களை பாராட்டுகிறேன். கடல்பசுவின் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் அனைவரும் அதனை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன், மீன்வள ஆய்வாளர் கெங்கேஸ்வரி, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார் ராமச்சந்திரன், வனச்சரக அலுவலர்கள் குமார் (பட்டுக்கோட்டை), ரஞ்சித் (தஞ்சாவூர்), இளஞ்செழியன் மற்றும் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜுதீன், ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா பேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பரிசு -சான்றிதழ்

கடந்த சில தினங்களுக்கு முன்பு மனோரா கடற்கரையில் மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ வகை கடல்வாழ் உயிரினமான கடல்பசுவை காப்பாற்றி கடலுக்குள் விட்ட மனோரா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சுப்பிரமணியன், சுரேந்திரன், சின்னமனை பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம், அசோக்குமார் ஆகியோருக்கு பரிசு-சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments