கட்டுமாவடி அருகே மந்திரிப்பட்டினத்தில் நெகிழ்ச்சி”.. கோவில் திருவிழாவுக்கு வரவேற்பு பேனர் வைத்து தாகம் தணித்த இஸ்லாமியர்கள்!




தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா கட்டுமாவடி அருகே மந்திரிப்பட்டினத்தில் இந்துக்கள் நடத்தும் கோவில் திருவிழாவிற்கு இஸ்லாமியர்கள் சார்பில் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பொதுவாக மத கலவரங்கள் வடமாநிலங்களில் அதிகமாக அரங்கேறி வருவதை அவ்வப்போது செய்திகளின் வாயிலாக பார்க்க முடிகிறது. அதே வேளையில் மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் சில நெகிழ்ச்சி சம்பவமும் அவ்வப்போது நடைபெறுவது இன்னும் இந்த மண்ணில் ஒற்றுமை என்னும் துளிர் வேறூன்றிக்கொண்டே இருக்கிறது என்ற ஆறுதலையும் தருகிறது. அந்த வகையில் தான் ஒரு சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது.



தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா திருவத்தேவன் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் மந்திரிப்பட்டினம். இந்த கிராமத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் மதநல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அதற்கு சிறந்த உதாரணமாக

பண்டிகைக்காலங்களில் ஒருவருக்கொருவர் பரஸ்பர உறவோடு, பலகாரங்களை பறிமாறிக்கொள்வதும், இந்துக்களின் திருவிழா நடைபெறும் போது, இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக தாம்பூழ தட்டோடு, அழைப்பிதழை வைத்து அங்குள்ள ஜமாத் நிர்வாகிகளிடம் நேரில் சென்று அழைப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.  இதே போல இஸ்லாமியர்களும் தங்களது பண்டிகை காலங்களில் இந்துக்களுக்கு பலகாரம் மற்றும் உணவு வகைகளை கொடுத்தும் நட்பு பாராட்டி ஒற்றுமையாக வாழ்ந்து மகிழ்கின்றனர்.

இப்படி காலங்காலமாக ஒற்றுமையாக வாழும் இரு சமூகத்தினரிடையே எந்தவொரு பிரச்சனைகளும் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அனைவரும் இங்கு மாமன் மச்சான்களாக பழகுவது தான் என்கின்றனர் அந்த கிராம வாசிகள்..
அந்த வகையில், தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் மந்திரிப்பட்டினம் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ கன்னி முத்து மாரியம்மன் கோவில் 26 ஆம் ஆண்டு வைகாசி பெருந்திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்த திருவிழாவிற்கு அங்குள்ள இஸ்லாமியர்கள் வரவேற்பு பதாகை வைத்து வரவேற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, மோர் பந்தல் அமைத்து திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தாகத்தையும் தீர்த்துள்ளனர்.
இந்த மதநல்லிணக்க சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கடந்த வருடம் மந்திரிப்பட்டினம் கிராமத்தில் இஸ்லாமியர்களின் வணக்கத்தளமான பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு மந்திரிப்பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் இந்துக்கள் சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்த நிகழ்வு அனைவரையும் நெகிழவைத்திருந்த நிலையில் திருவிழாவுக்காக இந்துக்கள் வரவேற்பு பதாகை வைத்து மோர் பந்தல் அமைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வரவேற்பை பெற்றுள்ளது.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments