மீமிசல் அருகே உள்ள முத்துக்குடாவில் அமைந்துள்ள இயற்கை அழகோடு வசீகரிக்கும் அலையாத்திக் காடுகளை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா I.A.S ஆய்வு




மீமிசல் அருகே உள்ள முத்துக்குடா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகளை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா அவர்கள்  படகில் சென்று  ஆய்வு செய்தார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் சார்ந்த கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் என பல இடங்கள் இருந்தாலும் இயற்கையாய் அமைந்த பசுமை நிறைந்த பகுதிகளும் ஏராளம் உள்ளன. இதில் ஒன்றுதான் முத்துக்குடா அலையாத்திக்காடுகள். கடலுக்குள் இந்தக் காடுகள் இருப்பதால் புயல் நேரங்களில் கூட அலையின் வேகத்தைக் குறைத்துப் பாதிப்புகளைத் தவிர்த்திருக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மீமிசலில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியைச் சேர்ந்த முத்துக்குடா கிராமம். முழுக்க முழுக்க மீனவ கிராமம். அங்குள்ள மீனவர்கள் நாட்டுப் படகுகளை மட்டுமே பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்துவருகின்றனர். மீனவப் பெண்கள் மீனவர்கள் பிடித்துவரும் மீன்களைச் சேகரிக்கவும் வலைகளைச் சரி செய்தும் உதவிகள் செய்துவருகின்றனர்.

இந்தக் கிராமத்தில்தான் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளுக்கு இணையாகக் கடலுக்குள் சுமார் 3 கி.மீ. சுற்றளவில் அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளன. ஆழமில்லாத கடலில் படகில் சென்று அழகான இயற்கையாய் அமைந்த காடுகளைச் சுற்றிப் பார்க்கக் காடுகளுக்கு நடுவில் இயற்கையாகவே கால்வாய் அமைந்துள்ளது. நாட்டுப்படகில் காட்டைச் சுற்றி அதன் அழகை ரசிக்க ஒருமணி நேரம் போதாது. அலையாத்திக் காடுகளுக்குள்ளேயே சில இடங்களில் மணல் திட்டுகளும் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் பசியாறும் இடமாகவும் அமைந்துள்ளது அந்த திட்டுகள்.

கலெக்டர் ஆய்வு

இந்நிலையில் ஜூன் 14 புதன்கிழமை அன்று மீமிசல் சரகம் திருப்புனவாசலில்  மக்கள் தொடர்பு முகாம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து ஜூன் 15 மாலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள முத்துக்குடா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகளை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா படகில் சென்று  ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் உடன் நாட்டானி புரசக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி, அரசு அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள், முத்துக்குடா கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 2021-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்குடா கடல் பகுதியில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அதிகாரிகளுடன் படகில் சென்று முன்னேற்பாடு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்தார் குறிப்பிடத்தக்கது.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments