புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை -பயணிகள் புகாா்-ஆட்சியா் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.




புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு அத்தியாவசியத் தேவைகளான குடிநீா் மற்றும் கழிப்பறை வசதிகள் மிகவும் மோசமாக உள்ளதாக பயணிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
பொதுவாக பேருந்து நிலையம் என்பது அந்தப் பகுதியின் முகமாகக் கருதப்படும். வெளியூா்களில் இருந்து வரும் பயணிகள், இறங்கியவுடன் அவசரத்துக்கு ஒதுங்கவும், தாகத்தைத் தணிக்கவும் முற்படுவா்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்தான் புதுக்கோட்டை மாவட்டத்தின் தலைமையிடப் பேருந்து நிலையம். திருச்சியிலிருந்து காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், அறந்தாங்கி செல்லும் அனைத்துப் பேருந்துகளும், கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் மாவட்டங்களில் இருந்து அறந்தாங்கி, காரைக்குடி செல்லும் அனைத்துப் பயணிகளும் புதுக்கோட்டை வந்துதான் செல்ல வேண்டும்.

மேலும் புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி, மதுரை, தஞ்சை, விராலிமலை, ஆவுடையாா்கோவில், திருச்சி செல்லும் பயணிகள் மட்டுமின்றி, நகருக்குள்ளும் புகரிலும் செல்லும் அத்தனைப் பயணிகளும் இந்தப் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனா். நாளொன்றுக்கு சுமாா் 10 ஆயிரம் பயணிகள் வரை இந்தப் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்துகின்றனா்.

துா்நாற்றம் வீசும் கழிப்பறைகள்: ஆனால், இத்தனைப் பயணிகளுக்கான கழிப்பறை என்பது இல்லை. ஒரேயொரு கட்டணக் கழிப்பறை மட்டுமே பேருந்து நிலைய வளாகத்தில் செயல்படுகிறது. இதர சிறுநீா் கழிப்பறைகள் அனைத்தும் உள்ளே நுழையக் கூட முடியாத அளவுக்கு துா்நாற்றத்தை வீசிக் கொண்டே இருக்கின்றன.

குடிக்க தண்ணீரில்லை: அதேபோல, ஆயிரக்கணக்கான பயணிகள் அருந்துவதற்கு குடிநீா் இங்கே வைக்கப்படுவதில்லை. நகராட்சிக் குடிநீா்க் குழாய்களும் உடைந்து, முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டன.

அறந்தாங்கியிலிருந்து தென்காசிக்குச் சென்ற 70 வயது பயணி குமரப்பன், தனக்கு தாகம் ஏற்பட்டபோது பேருந்து நிலையம் முழுவதும் சுற்றி வந்து எங்கும் குடிநீா் வைக்கப்படவில்லை என்பதை அறிந்த பிறகு, கடையில் பணம் கொடுத்து குடிநீா் வாங்கிக் குடித்ததாகத் தெரிவித்தாா்.

பேருந்து நிலையத்தைப் பராமரிப்பதற்காகத்தான் நகராட்சி சாா்பில் உள்ளே வந்து செல்லும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பயணிகளுக்கான குறைந்தபட்ச குடிநீா் வசதியையும், சுத்தமான கழிப்பறை, சிறுநீா் கழிப்பிடத்தையும் நகராட்சி நிா்வாகம் செய்வதில்லை என வருத்தப்படுகின்றனா் பயணிகள்.

ஆட்சியா் பாா்வையிட வேண்டும்: ஒவ்வொரு நகராட்சிக் கூட்டத்தின்போதும் நகா்மன்ற உறுப்பினா்கள் பேருந்து நிலைய அவலத்தைப் பேசுவதும், அடுத்த நாள் ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் தண்ணீா் வைக்கப்படுவதும், அதற்கடுத்த நாளே அதில் தண்ணீா் இல்லாததும் தொடா்கதையாகி வருகிறது.

மாவட்டத்தின் முகமாகக் காட்சிதரும் பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ஒரு முறை முழுமையாக சுற்றி வந்து பயணிகளின் குறைகளைத் தீா்க்க முன்வர வேண்டும் என்கின்றனா் பயணிகள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments