இராமநாதபுரத்தில் முழுவீச்சில் தயாராகி வரும் தற்காலிக பஸ்நிலையம்




ராமநாதபுரம் பழைய பஸ்நிலையத்தினை சீரமைத்து முழுவீச்சில் தற்காலிக பஸ்நிலையம் தயாராகி வருகிறது.

புதிய பஸ்நிலையம்

ராமநாதபுரத்தில் கடந்த 1986-ல் தற்போது இயங்கி வரும் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டது. இந்த பஸ்நிலையத்தில் இருந்து மதுரை, சென்னை, திருச்சி, ராமேசுவரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் சென்று வந்தன. மக்களின் தேவை மற்றும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இந்த பஸ்நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லவும் பயணிகள் ஏறிச்செல்லவும் போதுமான இடவசதியின்றி சிரமம் ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக பஸ்நிலையத்தை விரிவாக்கம் செய்து கூடுதல் வசதிகளுடன் அதே இடத்தில் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக பஸ்நிலையம் கட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ரூ.20 கோடியில் பஸ்நிலையம் கட்ட அரசு அனுமதி அளித்தது. இதன்படி ராமநாதபுரம் புதிய பஸ்நிலையத்தை இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் பஸ்நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்க உள்ளதை தொடர்ந்து அதில் உள்ள கடைகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்டிடங்களை இடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. தற்போது பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. இதற்கு மாற்றாக தற்காலிக பஸ்நிலையத்தினை ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்காலிக பஸ் நிலையம்

அதன்படி ராமநாதபுரம் பழைய பஸ்நிலையத்தினை சீரமைத்து தற்காலிக பஸ்நிலையமாக மாற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அங்கு சாலைகள் சீரமைக்கப்பட்டு பயணிகளின் தேவைக்காக ஆண்கள், பெண்களுக்கு தனியாக கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. விளக்குகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ பணிகள் முடிவடைந்த நிலையில் அருகில் நடைபெற்று வரும் பால பணிகள் காரணமாகவும் அதில் அமைய உள்ள இடதுபுற சாலை காரணமாகவும் பழைய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அந்த பணிகள் முடிவடைந்துவிட்டால் பழைய பஸ்நிலையத்தில் இருந்து திருச்சி, ராமேசுவரம், கீழக்கரை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, மதுரை, கோவை, விருதுநகர் உள்ளிட்ட மேற்கு நோக்கி செல்லும் பஸ்களை இயக்க ராமநாதபுரம் மூலக்கொத்தளம் பகுதியில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பஸ்கள்

அப்பகுதியில் வீட்டுவசதி வாரியத்தினர் குடியிருப்புகள் கட்ட தயாராகி வந்த நிலையில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. நகரசபை தலைவர் கார்மேகம் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கையினால் தற்காலிக பஸ் நிலையத்திற்காக இடம் ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தேவையான பஸ்நிலைய பணிகள் தொடங்கப்பட உள்ளன. இப்பணிகள் ஓரிரு நாளில் முடிவடைந்ததும் அங்கிருந்து மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் சென்றுவர உள்ளதாக கூறப்படுகிறது. 2 தற்காலிக பஸ்நிலையமும் தயாரான பின்னர்தான் எந்தெந்த பஸ்கள் எங்கிருந்து செல்லும் என முடிவு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments