மணமேல்குடி அருகே பயமறியானேந்தல் கிராமத்தினர் சார்பில் நடைபெற இருந்த மறியல் போராட்டம் ஒத்திவைப்பு!




மணமேல்குடி அருகே பயமறியானேந்தல் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாததை கண்டித்து நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, பெருமருதூர் சரகம், பயமறியானேந்தல் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், மேற்படி கிராமத்தில் உள்ள தெருவின் இருபுறங்களிலும் அவசர ஊர்திகள் செல்ல முடியாத நிலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றிட, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பயமறியானேந்தல் கிராம வளர்ச்சி மன்றம் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக சாலை மறியல் போராட்டம் 27.07.2023 காலை 10.00 மணியளவில் மணமேல்குடி அரசு மருத்துவமனை எதிரில், ECR சாலையில் நடத்தப்போவதாக துண்டு பிரசுரம் வெளியிட்டு அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று 27.07.2023 மாலை 04.00 மணியளவில் மணமேல்குடி வட்டாட்சியர் தலைமையில், மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக்கூட்டம் நடைபெற்றது.

இச்சமாதானக்கூட்டத்தில் போராட்டக்குழுவினர் சார்பாக 16 நபர்களும், அலுவலர்கள் சார்பாக தெற்கு வெள்ளாறு உதவி பொறியாளர், அரசு அறந்தாங்கி, வட்டார வளர்ச்சி அலுவலர், மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் உதவி காவல் ஆய்வாளர், பெருமருதூர் சரக வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்படி சமாதானக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. 
1. மணமேல்குடி தாலுகா, பெருமருதூர் சரகம், பயமறியானேந்தல் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் குடியிருந்து வருவதாகவும், மேற்படி கிராமத்தின் இரண்டு தெருக்களிலும், இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், கடந்த மூன்று வருடங்களாக பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், அவசரகால ஊர்திகள் கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மேற்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிதருமாறு பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
2. பயமறியானேந்தல் கிராமத்தில் உள்ள ஏரியில் படித்துறை கட்டுவதற்காக டெண்டர் எடுத்தும் மூன்று ஆண்டுகளாக கட்டிமுடிக்காமல் உள்ளதாகவும், விரைவில் கட்டி முடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
3. பயமறியானேந்தல் கிராம ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
4. பயமறியானேந்தல் கிராமத்தில் உள்ள தெருக்களில் ஏற்பட்டுள்ள
ஆக்கிரமிப்புகளை வட்டாட்சியர் முன்னிலையில் நில அளவை செய்து
அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு இருப்பின் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆக்கிரமிப்பு அகற்றிட கால அவகாசம் கொடுக்கப்பட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை எனில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய் துறை முன்னிலையில், காவல் துறை பாதுகாப்புடன் மூன்று மாத காலத்தில் நடவடிக்கை
எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
5. பயமறியானேந்தல் கிராமத்தில் மூன்று ஆண்டுகளாக கட்டப்படாமல் தாமதமாகும் படித்துறையை ஒருமாத காலத்திற்குள் கட்டிமுடிக்க மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் நெல்வேலி கிராம ஊராட்சிமன்ற தலைவர் கட்டிமுடிக்கப்படுவதாக
உறுதியளித்துள்ளார். 
6. பயமறியானேந்தல் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றிட இடப்பார்வை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி பொறியாளர் தெற்கு வெள்ளாறு உபகோட்டம் அலுவலரால் மூன்று மாத காலத்தில் முடித்து தருவதாக உறுதியளிக்கப்பட்டது.இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 

தகவல்: சுதாகர், பயமறியானேந்தல்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments