சென்னை தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு விரைவு ரெயிலை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்க வேண்டும் பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை




தாம்பரம்- நெல்லை சிறப்பு விரைவு ரெயிலை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது..இது குறித்து பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தம் ஆகியோர் தெற்கு ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர், மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு கட்டண விரைவு ரெயில்

தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில், நெல்லை -தாம்பரம் ஒருவழி சிறப்பு கட்டண விரைவு ரெயில் காரைக்குடி பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கியது. இந்த ரெயில் மாலை 3.40 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தை அடைந்தது.

வரவேற்பு

பட்டுக்கோட்டைக்கு இந்த ரெயில் வந்தபோது பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தினர் மற்றும் ரெயில் பயணிகள் ஆர்வத்துடன் வரவேற்றனர். அகல ரெயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி ரெயில் பாதையில் ஞாயிற்றுக்கிழமையில் சென்னைக்கு செல்ல ரெயில் வசதி இல்லை. இதனால் பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து விடுமுறை முடிந்து சென்னைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.தற்போது ஞாயிற்றுக்கிழமை இயங்கிய நெல்லை -தாம்பரம் விரைவு ரெயில், விடுமுறை முடிந்து சென்னைக்கு செல்லும் ரெயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.


சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்...

தாம்பரம்-திருநெல்வேலி- தாம்பரம் சிறப்பு விரைவு ரெயிலை சனிக்கிழமை இரவு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை திருநெல்வேலி சென்றடைந்து மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை தாம்பரம் சென்றடையும் வகையில் திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி ரெயில் பாதையில் இயக்கினால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.குறிப்பாக திருநெல்வேலி, திருச்செந்தூர், காரைக்குடி, திருவாரூர், வேளாங்கண்ணி, நாகூர், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம் போன்ற ஆன்மீக தலங்களுக்கு வரும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.எனவே இந்த சிறப்பு விரைவு ரெயிலை மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி ரெயில் பாதை வழியாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்க கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments