110 கி.மீ., 4 மணி நேர பயணம்: யாழ்ப்பாணம் - நாகப்பட்டினம் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை




இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் அந்நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது சேதமடைந்தது. இந்த துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு, கடந்த 2018-ம் ஆண்டில் சுமார் ரூ.300 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கியது. இந்தியாவின் நிதி உதவி மூலம் இத்துறைமுகமானது, வர்த்தக ரீதியிலான துறைமுகமாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, 16.06.2023-ல் திறக்கப்பட்டது.

முன்னதாக, காங்கேசன்துறையிலிருந்து புதுச்சேரியிலுள்ள காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. ஆனால், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கடந்த மாத இந்திய வருகையின்போது, காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது குறித்து வவுனியாவில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் செய்தியாளர் களிடம் கூறியதாவது: காங்கேசன்துறை - காரைக்கால் இடையே கப்பல் சேவை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையே பயணப்பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நாகப்பட்டினத்தில் பயணிகள் முனையம், சுங்க அலுவலகம் போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவடைந்தவுடன் பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றார்.

ரூ.8 கோடியில் முதல்கட்டப் பணிகள்: நாகப்பட்டினம் துறை முகத்தில் பயணிகள் முனையம் அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. இத்திட்டத்துக்காக வெளியுறவு அமைச்சகம் ரூ.8 கோடியை அனுமதித்துள்ளது. காங்கேசன் துறை - நாகப்பட்டினம் இடையே சுமார் 110 கி.மீ. தொலைவும், 4 மணி நேர கடல் பயணமுமாகும்.

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்திலிருந்து இலங்கையில் உள்ள வடமாகாணப் பகுதிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது, இந்திய-இலங்கை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments