ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் மெர்சி ரம்யா தகவல்




ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

ஆயத்த ஆடை உற்பத்தி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த அரசு தெரிவித்துள்ளது. பயனாளிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகளில் குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20, குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்கள் கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும், குறைந்தபட்சம் 10 நபர்களை (ஆண்/பெண்) கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். மேலும் குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

எனவே ஆர்வம் உள்ளவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments