மண்டபம் அருகே வாகன சோதனை: 1 டன் பீடி இலை பறிமுதல் இலங்கைக்கு கடத்த முயன்ற 3 பேர் கைது




சுங்கத்துறையினர் நடத்திய வாகன சோதனையில் இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் பீடி இலை மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பீடி இலைகளுடன் வாகனம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கடற்கரை பகுதியில் இருந்து பீடி இலை மூடைகள், இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு உச்சிப்புளி ரெயில்வே கேட் பகுதியில் சரக்கு வாகனம் ஒன்றை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அந்த சரக்கு வாகனத்தில் மறைத்து வைத்திருந்த 1 டன் பீடி இலை மூடைகளை கைப்பற்றினர். தொடர்ந்து சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

3 பேர் கைது

இது தொடர்பாக மண்டபத்தைச் சேர்ந்த செய்யது அபுதாஹிர் (வயது 45), முஸ்தபா(25), ஆசிக் ரகுமான் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், இந்த பீடி இலை மூடைகளை மண்டபம் அருகே உள்ள கடற்கரை பகுதிக்கு கொண்டு சென்று, அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. எந்த ஊரில் இருந்து இந்த பீடி இலை மூடைகள் வாங்கி கொண்டுவரப்பட்டன என்பது குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments