கடல்பாசி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை!






தனியார் கம்பெனிகள் குறைந்த விலைக்கு வாங்குவதால் கடல்பாசி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சுமார் 32 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் உள்ளன.

இதில் ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் மீன்பிடி தொழில் போக மற்ற நேரங்களில் இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் கடல் பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நூறு ஏக்கர் பரப்பளவில் பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பாசி வளர்ப்பு என்பது கடல் பகுதியில் மிதவை கம்புகளை மிதக்க விட்டு அதில் விதை பாசி கட்டி விட்டு 60 நாட்கள் சென்று அறுவடை செய்கின்றனர். இந்த பாசியானது அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும், உணவுப்பொருளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிஞ்சிய கழிவுகள் உரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. தொடர்ந்து அறுவடை செய்த பாசியை அதே பகுதியில் உலர வைத்து மதுரை, கோயம்புத்தூர், தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்த பாசி வளர்க்க தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அதிக வருமானம் வரக்கூடியது என்பதால் இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆர்வத்துடன் பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வெயிலிலும், மழையிலும் பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் எங்களுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை. தனியார் கம்பெனிகள் எங்களிடம் குறைந்த விலைக்கு பாசியை கொள்முதல் செய்கின்றனர். ஆகையால் இப்பகுதியில் பாசியை கொள்முதல் செய்ய அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். இந்த பாசியை காய வைத்திருக் கிறோம். இல்லாததால் மணல் பகுதியில் பாசியை காயப்போடுகின்றோம். இதனால் பாசியை கொள்முதல் செய்யும் தனியார் கம்பெனிகள் பாசியில் மணல் அதிகமாக உள்ளது என்பதை காரணம் காட்டி எடையை கழிக்கின்றனர். இதனால் மீனவர்கள் மேலும் நஷ்டம் அடைவதால் இப்பகுதியில் பாசி உலர வைக்க ஒவ்வொரு கிராமத்திலும் தளம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments