அடுத்த மாதம் முதல் புதிய நடைமுறை அமல்: ஆவணங்கள் பதிவில் சொத்து படங்களை இணைக்க வேண்டும் பதிவுத்துறை உத்தரவு




சார் பதிவாளர் அலுவலகங்களில் அடுத்த மாதம் முதல் ஆவணங்கள் பதிவின் போது சொத்து படங்களை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் பதிவுத் துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலா சாமி அறிவித்துள்ளார்.

சீர்திருத்த நடவடிக்கை

தமிழ்நாடு அரசின் வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதியப்படுவதைத் தடுக்கவும், விடுதல் இன்றி அரசுக்கு வருமானம் வருவதை உறுதி செய்யவும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டிடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என்று ஆவணங்கள் பதியப்படுவதனால் அரசுக்கு வரும் வருவாய் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே காலி மனையிடங்களை ‘ஜியோ கோ ஆர்டினேட்ஸோடு' (புவியியல் ஆயங்கள்) புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக இணைக்க வேண்டும் என கடந்த வாரத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.

மோசடி புகார்கள்

பதியப்படும் ஆவணத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் பக்கத்தில் இருக்கும் காலி இடத்தை புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக மோசடி பதிவு செய்யப்படுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. எனவே இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து அரசு புதியதொரு முடிவை எடுத்துள்ளது. அதன்படி சார்பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துகள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துகள் குறித்த புகைப்படம் ‘ஜியோ கோ-ஆர்டினேட்ஸோடு' எடுக்கப்பட்டு அதனை ஆவணமாக இணைக்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவருக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

அக்டோபர் மாதம் அமல்

இது குறித்த கூடுதல் வழிகாட்டுதல்கள் பதிவுத்துறை தலைவரால் தனியே வழங்கப்படும். இந்த நடைமுறையானது வருகிற அக்டோபர் முதல் தேதி முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments