மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு விரைவில் வந்தே பாரத் ரெயில் தயார் நிலையில் பராமரிப்பு பணிமனை




மதுரையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு பகல் நேர வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட இருப்பதால் பராமரிப்பு பணிமனையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத்

ரெயில்வே துறையில், இரட்டை அகலப்பாதை, மின்மயமாக்கல் என அனைத்து ரெயில்களும் குறைந்தபட்சம் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து, நவீன வசதிகளை கொண்ட அதிவிரைவு ராஜதானி, தேஜஸ், வந்தேபாரத் என பல்வேறு பெயர்களில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகளின் பயன்பாடு அதிகரிக்கும்போது, ரெயில் பயண செலவு குறைவதற்கு பதிலாக அதிகரித்து கொண்டே செல்கிறது.

கடந்த 2021-ம் ஆண்டு சுதந்திர தினத்தின் போது, 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, அதிவேக வந்தேபாரத் ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதாவது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெயிலாக இந்த ரெயில் இருக்கும் என்றும், அதன் பெட்டிகள் அனைத்தும் சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் மட்டும் தயாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மினி புல்லட் ரெயில் என்றழைக்கப்படும் வந்தே பாரத் ரெயில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி தனது முதல் சேவையை தொடங்கியது. அதன் பின்னர் ஒவ்வொரு மாநிலத்திலும் வந்தேபாரத் ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை சென்டிரல்-மைசூரு, சென்னை சென்டிரல்-கோவை, நெல்லை-சென்னை, திருவனந்தபுரம்-காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பெங்களூருவுக்கு

இதில் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் மதுரை வழியாக இயக்கப்படும் நெல்லை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சென்னை-கோவை ரெயில் ஆகியன 8 பெட்டிகளை கொண்டது. பிற வந்தேபாரத் ரெயில்கள் அனைத்தும் 16 பெட்டிகளை கொண்டுள்ளது. இதற்கிடையே, நெல்லை-சென்னை மற்றும் திருவனந்தபுரம்-காசர்கோடு வந்தேபாரத் ரெயில்கள் இயக்கத்துக்காக அந்த பாதையில் இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டு மாற்று நேரத்தில் இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு பகல் நேர வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்காக மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள பெட்டிகள் பராமரிப்பு பணிமனையில் போதிய வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட பயணிகளுக்கு பெங்களூருவுக்கு பகல்நேர ரெயில்கள் இயக்குவது மகிழ்ச்சியை கொடுத்தாலும், ரெயில் இயக்கத்தின் போது வழக்கமான ரெயில்கள் எத்தனை நடுவழியில் நிறுத்தப்பட உள்ளன என்ற கவலையும் உள்ளது.

ஏற்கனவே, நாகர்கோவில்-பெங்களூரு நள்ளிரவு எக்ஸ்பிரஸ் ரெயில், தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியன மதுரை ரெயில் நிலையம் வழியாக தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் எப்போதும் முன்பதிவு பயணிகளுக்கு காத்திருப்போர் பட்டியலில் மட்டுமே இடம் கிடைத்து வருகிறது. எனவே தற்போது இயக்கப்பட உள்ள வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க வாய்ப்புள்ளது. ஆனால், இந்த ரெயில் பெங்களூரு ரெயில் நிலையம் செல்வதற்கு பதிலாக 11 கி.மீ. தொலைவில் உள்ள எஸ்.எம்.வி.டி. ரெயில் நிலையத்துக்கு இயக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments