ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்ய பிடிஓ-க்களுக்கு அதிகாரம் இல்லை:... உயர்நீதிமன்றம் தகவல்




கிராம ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்ய ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு (பிடிஓ) அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் பள்ளித்தம்மன் ஊராட்சித் தலைவர் சண்முகபிரியா, மாரந்தை ஊராட்சித் தலைவர் திருவாசகம் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'ஊராட்சி செயலர்கள் ஊராட்சித் தலைவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர். எழுத்தர்கள் இடமாறுதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஊராட்சித் தலைவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என ஊராட்சி சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊராட்சி எழுத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கி அரசு 9.7.2013-ல் உத்தரவிட்டது.


இந்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடையாணை பிறப்பித்தது. அந்த தடை இப்போது வரை அமலில் உள்ள நிலையில் ஊராட்சி எழுத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கி அரசு சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அந்த சட்டத் திருத்தத்தை நீதிமன்றம் ஏற்காமல் தடையை நீட்டித்து உத்தரவிட்டது. தடையாணை அமலில் இருக்கும் நிலையில் தடையாணையை விலக்கிக் கொள்ளாமல் எங்கள் ஊராட்சி செயலர்களை இடமாறுதல் செய்து காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் 31.8.2023-ல் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் கொல்லம்குடி ஊராட்சி செயலாளர் ஆரோக்கியம், கவுரிப்பட்டி ஊராட்சி செயலாளர் ஆறுமுகம், கல்லல் ஊராட்சி செயலாளர் ஜோசப் ஆகியோர் தங்களை இடமாறுதல் செய்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் 24.7.2023-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனுக்களை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்தார். மனுதாரர்கள் வழக்கறிஞர்கள் வாதிடுகையில், ''கிராம ஊராட்சி வளர்ச்சியில் ஊராட்சி செயலர்களின் பங்கு முக்கியமானது. ஊராட்சி செயலாளர்களாக நியமிக்கப்படுபவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி செயலாளராக இருந்தால் கிராம ஊராட்சிப் பணிகளை நிறைவேற்றுவதிலும், நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் சிரமம் ஏற்படாது.

விதிப்படி ஊராட்சி செயலர்களை இடமாறுதல் செய்யும் தகுதியான அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லை. சட்டத்திருத்தத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை. இதற்கு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடையாணை பிறப்பித்துள்ளது. அதை விலக்காமல் ஊராட்சி செயலாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்” எனறார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ''கிராம ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்யும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உள்ளதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான ஒரு வழக்கில் 2013-ம் ஆண்டின் தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர்கள் (நிபந்தனை விதிகள்) விதிக்கு 2022-ல் தடையாணை பிறப்பித்துள்ளது. இதனால் ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்யும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு இல்லை. இருப்பினும் ஊராட்சி செயலாளர்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர்கள் பணி விதிகள் 2023-ல் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விதிகள் தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை 13.9.2023-ல் அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஊராட்சி செயலாளர்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதல் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த இடமாறுதல் உத்தரவுகள் அரசாணை பிறப்பிக்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால் இடமாறுதல் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments