அறந்தாங்கி நகராட்சி கூட்டம்: பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற கவுன்சிலர்கள் வலியுறுத்தல் நடவடிக்கை எடுப்பதாக தலைவர் உறுதி




அறந்தாங்கி நகராட்சி கூட்டத்தில் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றக்கோரி கவுன்சிலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தலைவர் உறுதி கூறினார்.

நகராட்சி கூட்டம்

அறந்தாங்கியில் நகராட்சி சாதாரண கூட்டம் நகர் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் ரா.ஆனந்த் தலைமை தாங்கினார். ஆணையர் பாலசுப்ரமணியன், துணை தலைவர் சுப்பிரமணியன், மேலாளர் மாலதி, பொறியாளர் தங்கபாண்டி, சுகாதார ஆய்வாளர் சரவணன், நகர சுகாதார அலுவலர் சக்திவேல் ஐயோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

புதிய கட்டிடம் கட்ட வேண்டும்

துணை தலைவர் சுப்பிரமணியன் (தி.மு.க.):- அறந்தாங்கி பகுதியில் உள்ள கலப்பக்காடு சாலைகளை மேம்படுத்த வேண்டும். அதேபோல் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில் உள்ள சூரியமூர்த்தி குளத்தின்கரையில் நடைபாதை அமைக்கும் பணி எப்பொழுது முடியும்.

கவுன்சிலர் யாசர் ஹமீது (தி.மு.க.):- வெண்ணாமல் குளத்தில் நடந்துள்ள பணிகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும். சாலைகளை மேம்படுத்த வேண்டும். தினசரி காய்கறி மார்க்கெட் இடிந்து விழும் தருவாயில் உள்ளது. நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

கொசு தொல்லை

கவுன்சிலர் சரோஜா (தி.மு.க.):- எல்.என்.புரத்தில் வடிகால் வாய்க்கால்கள் கட்டித்தர வேண்டும். மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.

கவுன்சிலர் மங்கையர்க்கரசி (அ.தி.மு.க.):- அறந்தாங்கி நகர மையப்பகுதியில் உள்ள குட்டைகள், குளத்தில் தாமரை செடி அதிகமாக மண்டி கிடப்பதால் அதில் கொசு தொல்லைகளும் நோய் பரவும் நிலை ஏற்பட உள்ளது. உடனே அந்த தாமரை செடிகளை அகற்றி விட வேண்டும். கோட்டைப்பகுதியில் கழிவுநீர், குப்பைகள் கொட்டிக் கிடப்பதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனை உடனே அகற்ற வேண்டும்.

குடிநீர் பிரச்சினை

கவுன்சிலர் சையத்தம்மாள் (தி.மு.க.):- எனது வார்டில் குடிநீர் பிரச்சினை அதிகமாக உள்ளது. தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்து தர நகர்மன்றம் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசாருதீன் (காங்கிரஸ்):- எனது வாா்டில் குடிதண்ணீர் கலங்கலாக வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் குடிப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்து தர வேண்டும்.

கவுன்சிலர் விசுவமூர்த்தி (சுயேச்சை):- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறந்தாங்கியில் வெளியில் இருந்து செல்லும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதே போல கவுன்சிலர்கள் பலர் தங்களது வார்டுகளில் உள்ள கோரிக்கைகள் குறித்து பேசினர்.

ஆணையர் பாலசுப்ரமணியன் பேசுகையில், அனைத்து கவுன்சிலர்கள் ஒத்துழைப்புடன் நகரத்தில் ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்படும். அதற்கு உங்களோட ஒத்துழைப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்றார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

தொடர்ந்து நகர் மன்ற தலைவர் ரா.ஆனந்த் பேசுகையில், நகராட்சியில் குடிநீர் குழாய் அமைப்பது முடியும் தருவாயில் உள்ளது. அதன் பிறகு சாலை வசதிகள், மின்விளக்கு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று முடிவடையும். தெரு நாய் தொல்லைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சியில் தெருவிளக்குகள் கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வார்டுகளில் கவுன்சிலரின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments