சாலையில் ஏற்படும் பள்ளங்கள் குறித்து புகார் தெரிவிக்க ‘நம்ம சாலை’ என்ற கைப்பேசி செயலி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்




சாலையில் ஏற்படும் பள்ளங்கள் குறித்து புகார் தெரிவிக்க ‘நம்ம சாலை’ என்ற புதிய கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

‘நம்ம சாலை’ கைப்பேசி செயலி

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், பள்ளங்களற்ற சாலை என்ற இலக்கை அடைய, சாலையில் ஏற்படும் பள்ளங்களை பொதுமக்களின் துணையோடு கண்டறிந்து, குறித்த காலத்தில் செப்பனிடும் திட்டத்திற்காக “நம்ம சாலை” என்ற புதிய மென்பொருள் மற்றும் கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

இதன் தொடக்க விழா நேற்று சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. விழாவுக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.

உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, “நம்ம சாலை” கைப்பேசி செயலியை தொடங்கிவைத்தார். தமிழ்நாடு “விபத்தில்லா மாநிலம்” என்ற முதல்-அமைச்சரின் தொலைநோக்கு திட்டத்தினை செயப்படுத்த, “பள்ளங்களற்ற சாலை” என்ற இலக்கினை அடைவதற்கு ஏதுவாக, பொதுமக்களின் துணையோடு கண்டறியப்படும் சாலையில் ஏற்படும் பள்ளங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரிசெய்யப்பட வேண்டும் என்பதால், 2023-2024-ம் ஆண்டு மானியக் கோரிக்கையின்போது, பிரத்யேக கைப்பேசி செயலி உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

புகைப்படமும் பதிவேற்றலாம்

அதன் அடிப்படையில், ‘நம்ம சாலை’ என்ற மென்பொருள் மற்றும் கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலியின் மூலம் நெடுஞ்சாலைத்துறையினால் பராமரிக்கப்படும் சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் குறித்து பொதுமக்கள் கைப்பேசி செயலி வாயிலாக, புவி குறியீட்டுடன் கூடிய புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் அச்சாலைக்குரிய பொறியாளருக்கு செயலி வாயிலாக தெரிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பள்ளங்களை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு, சரிசெய்யப்பட்ட விவரம், சாலையின் புகைப்படங்களுடன், “நம்ம சாலை” செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, புகார் அளிக்கும் பொதுமக்களின் செல்போனுக்கு அனுப்பப்படும். அதன்படி, சாலையில் ஏற்படும் பள்ளங்கள் உடனுக்குடன் சீர் செய்யப்படுவது மட்டுமல்லாமல், தடையற்ற போக்குவரத்து உறுதி செய்யப்படும்.

பேரிடர் கால புகார்களும் அளிக்கலாம்

இச்செயலி மூலம் பள்ளங்கள் குறித்து தெரிவிப்பதுடன் மட்டுமல்லாமல், பேரிடர் காலங்களில் மரம் விழுதல், வெள்ளப்பெருக்கு போன்றவற்றை குறிக்கும் புகார்கள் அளிக்க ஏதுவாக உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த விழாவில் ரூ.204 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் மேலூர்-திருப்பத்தூர் சாலை, ரூ.198 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் தஞ்சாவூர்-மன்னார்குடி சாலை, ரூ.219 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலை ஆகிய இரு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலைகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் எஸ்.பிரபாகர், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர், தலைமை பொறியாளர்கள், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments