மணமேல்குடி ஒன்றிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மருத்துவ முகாம் நடத்தப்படும் தலைவர் பரணி கார்த்திகேயன் தகவல்




மணமேல்குடி ஒன்றிய பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று தலைவர் பரணி கார்த்திகேயன் ெதரிவித்துள்ளார்.

சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சீனியார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டது.

கூட்டத்தில் தலைவர் பேசுகையில், மணமேல்குடி ஒன்றியத்தில் சாலை முழுவதுமாக சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் மழைக்காலம் ஆரம்பித்ததால் நகரம், கிராமப்புறங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும் சுகாதாரத்துறையின் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

மழைக்காலம் தொடங்கியுள்ளதால் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக கவுன்சிலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் சூடான தண்ணீர் பருக வேண்டும். நிலவேம்பு கசாயம் அருந்த வேண்டும். மழை காலங்களில் மின்கம்பம் அருகில் செல்லுதல் கூடாது, மின்கம்பிகளை தொடவோ, மிதிக்கவோ கூடாது என அறிவுறுத்த வேண்டும்.

ஊராட்சிகளில் சாக்கடை கழிவுநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி இருந்தால் உடனே செப்பனிடப்படும். கிராமப்புறங்களில் அடிப்படை வசதி தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், அரசமணி மற்றும் கவுன்சிலர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments