நெல்லையில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக சென்னைக்கு செல்லும் தீபாவளி சிறப்பு ரெயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் ரெயில் பயணிகள் கோரிக்கை




நெல்லையில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக சென்னைக்கு செல்லும் தீபாவளி சிறப்பு ரெயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள், வர்த்தகர்கள் கோரிக்கை அனுப்பியுள்ளனர்.

சிறப்பு ரெயில்

மயிலாடுதுறை-திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் பாதையில் தெற்கு ரெயில்வே திருநெல்வேலி-சென்னை எழும்பூர்-திருநெல்வேலி (வண்டி எண் 06070/ 06069) விழாக்கால சிறப்பு விரைவு ரெயிலை பயணிகள் நெரிசலை குறைக்க இயக்கி வருகிறது.

இந்த ரெயில் திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 9, 16, 23 ஆகிய மூன்று நாட்களில் புறப்பட்டு சென்னைக்கு செல்கிறது. மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து 10,17,24 ஆகிய மூன்று நாட்களில் புறப்பட்டு திருநெல்வேலிக்கு செல்கிறது.

இந்த ரெயில் மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதியில் உள்ள பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நிரந்தரமாக இயக்க வேண்டும்

திருவாரூர்-பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல ரெயில் பாதை 2019-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பிறகும் கூட முன்பு இத்தடத்தில் இயங்கி வந்த கம்பன் விரைவு ரெயில் போன்று சென்னை எழும்பூருக்கான தினசரி இரவு நேர விரைவு ரெயில் இயக்கப்படவில்லை. தற்போது தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்பட்டு வரும் திருநெல்வேலி-சென்னை, எழும்பூர்-திருநெல்வேலி விழாக்கால சிறப்பு ரெயிலை நிரந்தரமாக சாதாரண கட்டணத்தில் இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ரெயில் பயணிகள், வர்த்தகர்கள், அலுவலர்கள், மத்திய ரெயில்வே மந்திரி, ரெயில்வே வாரிய தலைவர், தெற்கு ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ரெயில் நிரந்தரமாக சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட்டால் இப்பகுதி பயணிகள் சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி செல்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments