புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ‘செல்பி பாயிண்ட்’ பயணிகள் வரவேற்பு




புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ‘செல்பி பாயிண்ட்' அமைக்கப்பட்டுள்ளது. இது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ரெயில் நிலையங்கள்

நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தல் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பிரத்யேக திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நாட்டின் வளர்ச்சியில் ரெயில்வே துறையின் பங்கும் முக்கியமாக கருதப்படுகிறது. ஏழை முதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் அன்றாட தேவைகளுக்கு ரெயில் போக்குவரத்து அத்தியாவசியமாக திகழ்கிறது.

இந்த நிலையில் ரெயில்நிலையங்களில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலும், பொதுமக்கள் பார்வையில் படும்படியும், அதில் ‘செல்பி' எடுக்கும் வகையிலும் வசதி ஏற்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் தெற்கு ரெயில்வேயில் சென்னை, மதுரை, திருவனந்தபுரம் ஆகிய 3 கோட்டங்களில் 34 ரெயில் நிலையங்களில் ‘செல்பி பாயிண்ட்' அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

பிரதமர் மோடி புகைப்படம்

மதுரை ரெயில்வே கோட்டத்தில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் அருகே ‘செல்பி பாயிண்ட்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்' திட்டத்தில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வசதி ஏற்படுத்திய மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் குடிநீர் குழாய் மாதிரி, அதில் தேசிய கொடி வருவது போலவும், அது பெரிய மண் பானையில் விழுந்து நிரம்புவதை போலவும் மாதிரி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் மோடியின் முழு உருவப்படமும், இது புதிய இந்தியா என்ற வாசகம் ஆங்கிலத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் சாதனை விளக்க கண்காட்சியாகவும் விளங்குகிறது. இதனை பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் பிரதமர் மோடி முழு உருவப்படத்தின் முன்பு நின்று ‘செல்பி' எடுத்தும் மகிழ்கின்றனர். இந்த ‘செல்பி பாயிண்ட்' பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மதுரை கோட்டம்

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘மதுரை கோட்டத்தில் புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், பரமக்குடி, தென்காசி, புனலூர், விருதுநகர், கோவில்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் மத்திய அரசின் சாதனை விளக்கங்கள், செல்பி பாயிண்டுடன் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் மத்திய அரசின் வெவ்வேறு திட்டங்களின் சாதனைகள் இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் புதுக்கோட்டைக்கு மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் சாதனையை விளக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments