அதிராம்பட்டினத்தில் வீட்டுக்குள் புகுந்து மூன்று வயது குழந்தையை கடித்து குதறிய 3 வெறி நாய்கள்!




அதிராம்பட்டினத்தில் நாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், வீட்டில் இருந்த 3 வயது குழந்தையை வீடு புகுந்து 3 வெறிநாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக நாய்கள் பிரச்சனை தலைதூக்கி இருக்கிறது. சமீபத்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெறிநாய் சென்னையில் 30 க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பதைபதைக்க வைக்கும் சம்பவம் ஒன்று தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடந்து இருக்கிறது. அதிராம்பட்டினத்தில் வீட்டில் இருந்த மூன்றரை வயது குழந்தை வெறி நாய்களின் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறது.


வீட்டிற்குள் இருந்த குழந்தையை உள்ளே புகுந்து 3 வெறி நாய்கள் கடித்துக் குதறி இருக்கின்றன. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் காயமடைந்த குழந்தையை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் தலை, கை போன்ற இடங்களில் நாய்கள் கடித்தும், பிராண்டியும் வைத்து உள்ளன. அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நாய் கடிக்காக சிகிச்சை பெற பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்று இருக்கிறார்கள்.


அதிராம்பட்டினத்தில் பல மாதங்களாக தெருவில் திரியும் வெறி நாய்களின் தொல்லை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சிறார்கள், பெண்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாய்களை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கடந்த மாதம் கூட இரவு அதிராம்பட்டினத்தின் பிரதான சாலையான சேர்மன் வாடி - வண்டிப்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனம் சென்றுகொண்டு இருந்தபோது நாய்கள் குறுக்கே புகுந்தன.


இருசக்கர வாகனத்தில் சென்றவர் சுதாரித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் அதிராம்பட்டினம் புதுமனைத் தெரு பகுதியில் 4வது லைனில் நடந்து சென்ற பெண்ணை நாய் ஒன்று துரத்தி கடித்தது. அந்த பெண் கீழே விழுந்து கை எழும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. நகராட்சி நிர்வாகம் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

கடந்த ஜூலை மாதம் அதிராம்பட்டினம் நகர சபைக் கூட்டத்தில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அதிராம்பட்டினம் நகராட்சி 27 வார்டுகளில் தெருவில் உள்ள நாய்களுக்கு கருத்தடை செய்து கட்டுப்படுத்துவதற்கு நாய் ஒன்றுக்கு ரூ.1450 கட்டணம் என ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 3 மாதங்கள் கடந்து உள்ள நிலையில், அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்வி எழுந்து உள்ளது. தற்போது நாய்கள் தொல்லையும், அதன் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments