இலங்கை கடற்படையினர் அத்துமீறல்: புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 5 பேர் சிறைபிடிப்பு




எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

புதுக்கோட்டை மீனவர்கள்

வங்கக்கடலில் உருவாகியிருந்த ‘மிக்ஜம்’ புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. புயல் கரையை கடந்த நிலையில் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து சுமார் 180 விசைப்படகுகளிலும், ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 70 விசைப்படகுகளிலும் மீனவர்கள் கடலுக்கு 5-ந்தேதி மீன்பிடிக்க சென்றனர்.

இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரில்வான் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த அபு மன்சூர் (வயது 48), இப்ராஹிம் (45), அகமது (38), கணேசன் (58) ஆகியோரும், டிக்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் முனியசாமி (40), செந்தூரப்பாண்டி (24), அருள் (33), தன்ராஜ் (55) ஆகியோரும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 8 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நடுக்கடலில் சிறைபிடித்தனர். மேலும் அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் 5 பேர் கைது

இந்த நிலையில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த நடேசன் நாட்டார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற அதே பகுதியை சேர்ந்த ராமநாதன் (51), முத்தால் (48), அஞ்சப்பன் (38), செல்வகுமார் (48), அப்துல் ரசாக் (36) ஆகிய 5 பேரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்து உள்ளனர்.

பின்னர் கைதான 13 மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். காங்கேசன் ராணுவ முகாமில் வைத்து 13 மீனவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் 13 மீனவர்களும் இலங்கையில் உள்ள ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு நீதிபதி கஜநீதிபாலன், 13 மீனவர்களையும் 21-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டையை சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments