விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அனுமதி மறுப்பு: நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் நல்ல விலைக்கு விற்பனை வெளிமாநிலங்களுக்கு நண்டுகள் ஏற்றுமதி




பலத்த காற்று காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் நல்ல விலைக்கு விற்பனையாகிறது. மேலும், வெளிமாநிலங்களுக்கு நண்டுகள் ஏற்றுமதியாகிறது.

மீன் மார்க்கெட்

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி, மணமேல்குடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு 15-க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் கம்பெனிகள் செயல்படுகின்றன. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் விற்பனைக்கு வருகிறது.

இதேபோல் ராமநாதபுரம், பாம்பன், ராமேசுவரம், தூத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த மீன்களை வாங்குவதற்காக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

பாறை மீன் கிலோ ரூ.400-க்கு விற்பனை

பருவமழை மற்றும் கடலில் பலத்த காற்று வீசுவதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் கடந்த 6 நாட்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே கடலில் மீன் பிடித்து வருகின்றனர். நாட்டுப்படகு மீனவர்கள் செங்கனி, பாறை, முரல், நண்டு, இறால் போன்ற அனைத்து மீன் வகைகளையும் பிடித்து விற்பனைக்கு கட்டுமாவடி, மணமேல்குடி மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர்.

விசைப்படகு கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் நல்ல விலைக்கு விற்பனையாகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், தற்போது பாறை மீன் கிலோ ரூ.400-க்கும், முரல் ரூ.300-க்கும், செங்கனி ரூ.350-க்கும், நண்டு, இறால் கிலோ ரூ.400-க்கும் விற்பனையாகிறது. இந்த மீன்களை வெளியூர் வியாபாரிகளும், மீன் பிரியர்களுக்கு வாங்கி செல்கின்றனர். மேலும் புதுக்குடி பகுதியில் பிடிக்கப்படும் நண்டுகள் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதியாகிறது என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments