கிராமங்களில் இணையதள வசதிக்காக விளைநிலங்களில் கண்ணாடி இழை பதிப்பால் பாதிப்பு ஏற்படாது கலெக்டர் தகவல்




கிராமங்களில் இணைய தள வசதிக்காக விளைநிலங்களில் கண்ணாடி இழை பதிப்பால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இணையதள வசதி

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைக்கப்படுகிறது. இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 328 ஊராட்சிகளில் இணைய வசதி வழங்கிட தயார் நிலையில் உள்ளது.

இத்திட்டத்திற்கான ரேக், யு.பி.எஸ். உள்ளிட்ட உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

தடை செய்யக்கூடாது

இத்திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின்வசதி உள்ளதை உறுதி செய்திடவும், பி.ஓ.பி. பொருத்தப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர் அரசாணையின்படி பொறுப்பாக்கப்பட்டு உள்ளார். கண்ணாடி இழை 85 சதவீதம் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்தநிலையில் சிலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கண்ணாடி இழை கொண்டு செல்லக்கூடாது என தடை செய்கின்றனர். இத்திட்டம் முழுமையான அரசின் திட்டம் கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது. எனவே இக்கண்ணாடி இழை ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல பொதுமக்கள் தடை செய்யக்கூடாது.

பாதிப்பு ஏற்படாது

மேலும், விளைநிலங்களில் உள்ள மின்கம்பங்களின் வழியாக கண்ணாடி இழைகள் இணைக்கப்படும் போது பயிர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. கண்ணாடி இழையில் எந்தவிதமான உலோக பொருட்களும் இல்லை. எனவே இதனை திருடி சென்று காசாக்கலாம் என தவறான புரிதல் வேண்டாம். இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் அதிவேக இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பி.ஓ.பி. மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம் யு.பி.எஸ்., ரூட்டர், ரேக் மற்றும் கண்ணாடி இழை வலையமைப்பு உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகளாகும்.

மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும், கண்ணாடி இழைகளை துண்டாக்கும் மற்றும் மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல தடை செய்யும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments