மிக்ஜம்’ புயல் மழை பாதிப்பு வீடு இழந்தவருக்கு ரூ.4 லட்சம், சிறு குறு வணிகருக்கு ரூ.1 லட்சம் கடன் ரூ.1,000 கோடியில் நிவாரண உதவி மாநில அரசு நிதியில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு




சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளிலும், 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

அதில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டன. தமிழக அரசு சார்பில் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் 21-ந் தேதி ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதற்கிடையே, நிவாரண உதவி தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்கு தேவையான உதவிகள் பட்டியலிடப்பட்டு அதற்கான தீர்வுகள் காணப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

புதிய வீடுகள்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாக கட்டித்தருவதும் அரசின் தலையாய கடமை என்பதை கருத்தில் கொண்டு வீடுகள் பழுது பார்ப்பதற்கும், முழுமையாக கட்டித்தருவதற்கும் அரசு முடிவெடுத்துள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாக கட்டுவதற்கு ரூ.4 லட்சம் வழங்கவும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.2 லட்சம் வரை வழங்குவது எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.

இதன் மூலம் மொத்தம் 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,577 புதிய வீடுகள் கட்டப்படும் மற்றும் 9,975 வீடுகளுக்கு பழுது நீக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டம் முழுவதும் மாநில அரசு நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும். இதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

பயிர் சேத நிவாரணம்

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 64 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கென இழப்பீட்டு நிவாரணம் மொத்தம் 250 கோடி ரூபாய் வழங்கப்படும். பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்கப்படும். மேலும் எந்திரங்கள் வாங்குவதற்கும் கடன் வழங்கப்படும்.

விவசாய நிலங்களில் வெள்ளத்தால் அடித்துவரப்பட்டு மண் படிந்துள்ளது. இதனை அகற்றி மீண்டும் விவசாயத்திற்கு ஏற்றவகையில் சீர்செய்து தரும் பணி மாநில வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக கட்டணமின்றி மேற்கொள்ளப்படும். இதற்கு வெளிமாவட்டங்களில இருந்து தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் வரவழைக்கப்படும்.

சிறு வணிகர்கள்

சென்னை, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் சிறு வணிகர்கள் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளனர். அரசு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டிய அவசர தேவையைக் கருத்தில் கொண்டும், உள்ளூர் பொருளாதாரத்தில் அவர்களது பங்களிப்பை அறிந்தும் அதன் அடிப்படையில் சிறு வணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் கடன் தேவைகளை நிவர்த்தி செய்ய இந்த கடன் வழங்கப்பட உள்ளது.

சிறு வணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை 4 சதவீத வட்டி, ரூ.1 லட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

சிறப்பு திட்டம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்களுக்காக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் மூலம் “சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வெள்ள நிவாரண கடன் உதவி திட்டம்” என்ற சிறப்பு திட்டம் தொடங்கப்படும்.

இந்த திட்டத்தின்கீழ், மேற்கூறிய மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைந்துள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.100 கோடி கடனாக வழங்கப்படும்.

தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை, ஆண்டுக்கு 6 சதவீத சிறப்பு சலுகை வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். இக்கடனை தொழில் நிறுவனங்கள் 3 மாத கால அவகாசத்துடன் 18 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம். இத்திட்டத்தின் மூலம் சுமார் 3,300 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும்.

மகளிர் சுயஉதவி குழுக்கள்

சென்னை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களின் கடன் திருப்பம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

அவர்களுடைய நிலையைக் கருத்தில் கொண்டு புயல், வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் கடன் பெற்றுள்ள சுயஉதவி குழுக்கள் நிவாரண கடன் தவணை மற்றும் வட்டியை திருப்பி செலுத்தவதற்கும் அவர்கள் பெற்றுள்ள கடனை மறுசீரமைப்பும் செய்து தரப்படும். மாநில மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளர் குழு கூட்டத்தில் இதனை செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில், நடப்பு ஆண்டில், கடன் பெறத்தகுதி வாய்ந்த மகளிர் 4 ஆயிரம் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.350 கோடி அளவில் புதிய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கால நீட்டிப்பு

பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலுவையிலுள்ள கடன் தவணைகளை செலுத்துவதில் கால நீட்டிப்பு குறித்து மாநில அளவிலான வங்கியாளர் குழுவில் விரைவில் உரிய முடிவெடுக்கப்படும்.

ஆடு, மாடுகள்

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் 4,928 மீன்பிடி படகுகளும், எந்திரங்களும் சேதமடைந்துள்ளன. இதற்கென நிவாரண தொகையாக ரூ.15 கோடி வழங்கப்படும். தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பசு, எருமைக்கு 37 ஆயிரத்து 500 ரூபாய் வரையிலும், ஆடு, செம்மறி ஆடு ஒன்றிற்கு 4 ஆயிரம் ரூபாய் வரையிலும், கோழி ஒன்றிற்கு 100 ரூபாய் வரையிலும் வழங்கப்படும்.

கால்நடை இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கால்நடைகளை வாங்க வசதியாக ரூ.1½ லட்சம் வரை புதிய கடன் வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட உப்பள தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உப்பள தொழிலாளர்களுக்கு கூடுதல் வாழ்வாதார நிவாரண தொகை தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புத்தகங்கள் வழங்கப்படும்

வெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகளின் பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் அல்லது சேதமடைந்து இருக்கலாம். அவர்களுக்கு புதிய சான்றிதழ்களை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சான்றிதழ்களை இழந்த மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளியில் விண்ணப்பம் எழுதிக்கொடுத்தால் அவர்களுக்கு அந்த பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் மூலமாக புதிய மாற்றுச்சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பாடப்புத்தகங்களை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அவர்கள் படிக்கும் பள்ளியின் மூலமாக வழங்கப்படும். இது பாதிப்புக்குள்ளான அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேவைக்கேற்ப அவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும்.

வருவாய்த்துறை மற்றும் இதர அரசுத் துறைகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள், ஆவணங்கள், குடும்ப அட்டை, வாகன ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற அரசு ஆவணங்களை இந்த மழை வெள்ளத்தால் இழந்தவர்கள் புதிய ஆவணத்தை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் அந்தந்த மாவட்ட கலெக்டரால் வரும் திங்கட்கிழமை தோறும் தொடங்கப்படும்.

வாகனங்களுக்கான காப்பீடு

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் காப்பீட்டு நிறுவனங்களும், வாகன தயாரிப்பு நிறுவனங்களும், முகவர்களும் சிறப்பு முகாம்கள் நடத்தி தங்களது சேவைகளை துரிதப்படுத்திட தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் வாகன பழுது பார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 3,046 மோட்டார் வாகனங்கள் பழுதுபார்ப்பு பணிகளுக்காக கொண்டுவரப்பட்டு அவற்றில் 917 வாகனங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,129 வாகனங்களுக்கான பழுதுபார்ப்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments