புதிய விமான முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரமாண்ட விழா பிரதமர் மோடி நாளை திருச்சி வருகை




புதிய விமான முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரமாண்ட விழா பிரதமர் மோடி நாளை திருச்சி வருகை ரூ.19,850 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க் கிழமை) திருச்சி வருகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் ரூ.19,850 கோடியில் புதிய மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.


சென்னையை அடுத்து வளர்ந்துவரும் பெருநகரமாக திருச்சி திகழ்கிறது. நாளுக்குநாள் விமான பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் இங்குள்ள விமான நிலையத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

இதனையடுத்து புதிய விமான நிலைய முனையம் கட்ட இந்திய விமான நிலைய ஆணைய குழுமம் ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்தது.

பிரதமர் மோடி வருகை

2019-ம் ஆண்டு முதல் கட்டுமான பணிகள் தொடங்கின. பின்னர் கூடுதலாக ரூ.249 கோடி செலவு செய்து கட்டுமான பணிகள் ரூ.1,200 கோடியில் நிறைவு பெற்றுள்ளது.

புதிய முனையம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 4 ஆயிரம் சர்வதேச பயணிகளையும், 1,500 உள்நாட்டு பயணிகளையும் கையாள முடியும்.

இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, புதிய முனையத்தை திறந்து வைத்து, ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கியும் வைக்கிறார். இதற்காக விமான நிலையம் அருகே பிரமாண்ட பந்தலுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புதிய முனையம் திறப்பு

முன்னதாக இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தனி விமானம் மூலம் நாளை காலை 10.10 மணிக்கு திருச்சி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார்.

அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். பின்னர் 11.45 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும் பிரமாண்ட விழாவில் புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

இந்த விழாக்களில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய மந்திரிகள், அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். விழா முடிந்ததும் பகல் 1.05 மணிக்கு பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி திருச்சி வருகையையொட்டி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பலத்த பாதுகாப்பு

விமான நிலையத்தின் உட்புறங்களில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும், திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.

இதற்கிடையே பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் 30 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். விமான நிலையம் அருகே உள்ள வீடுகள் மற்றும் பணியாற்றுபவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

விமான நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. பிரதமர் மற்றும் முதல்-அமைச்சரின் வருகையையொட்டி 12 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு பணிக்காக திருச்சிக்கு வந்து முகாமிட்டுள்ளனர்.

இந்தநிலையில் கூடுதல் டி.ஜி.பி. அருண் இன்று (திங்கட்கிழமை) திருச்சிக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார். இந்த பாதுகாப்பு பணியில் மொத்தம் 36 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திட்டப்பணிகள்

திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ள திட்டப்பணிகளின் விவரம் வருமாறு:-

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) மத்திய அரசு நிதியில் ரூ.41 கோடி மதிப்பீட்டில் 253 அறைகளுடன் 4 மாடியில் கட்டப்பட்ட 506 மாணவர்கள் தங்குவதற்கான விடுதியை திறந்து வைக்கிறார். மேலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் செங்கல்பட்டு முதல் எண்ணூர்-திருவள்ளூர்-பெங்களூரு-புதுச்சேரி-நாகப்பட்டினம்-மதுரை-தூத்துக்குடி வரை 488 கிலோ மீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் 697 கிலோ மீட்டர் நீளமுள்ள விஜயவாடா-தர்மபுரி ‘மல்டி புராடக்ட்’ பெட்ரோலிய குழாய் திட்டம் ஆகிய இரு திட்டங்களும் முக்கியமானவையாகும்.

ரூ.9 ஆயிரம் கோடியில் முடிவுற்ற இந்த திட்டங்களையும், கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்ட விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

நாட்டுக்கு அர்ப்பணிப்பு

சேலம் - மேக்னசைட் சந்திப்பு - ஓமலூர் - மேட்டூர் அணைப்பிரிவில் 41.4 கிலோமீட்டர் இரட்டை ரெயில் பாதை திட்டம், மதுரை - தூத்துக்குடி இடையே 160 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டை ரெயில்பாதை அமைக்கும் திட்டம், திருச்சி - மானாமதுரை - விருதுநகர் ரெயில்பாதை மின்மயமாக்கல், விருதுநகர் - தென்காசி சந்திப்பு மின்மயமாக்கல், செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - நெல்லை - திருச்செந்தூர் ரெயில்பாதை மின்மயமாக்கல் ஆகிய திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதேபோல் தேசிய நெடுஞ்சாலை 81-ன் திருச்சி-கல்லகம் பிரிவில் 39 கிலோ மீட்டர் நான்குவழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 81-ன் கல்லகம் - மீன்சுருட்டி பிரிவின் 60 கிலோ மீட்டர் நீளத்துக்கு 4/2 வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 785-ன் செட்டிக்குளம் - நத்தம் பிரிவின் 29 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 536-ன் காரைக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 80 கிலோ மீட்டர் இருவழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 179ஏ சேலம்-திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையின் 44 கிலோ மீட்டர் நீளத்துக்கு நான்குவழிச்சாலை ஆகியவற்றையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இயற்கை எரிவாயு குழாய்

இந்த சாலை திட்டங்கள் திருச்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேசுவரம், தனுஷ்கோடி, உத்திரகோசமங்கை, தேவிப்பட்டினம், ஏர்வாடி, மதுரை போன்ற தொழில் மற்றும் வணிக மையங்களின் இணைப்பை மேம்படுத்த உதவும். காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குக்கப்பல் தங்குமிடம் 2-ஐ (ஆட்டோமொபைல் ஏற்றுமதி-இறக்குமதி முனையம்-2 மற்றும் துறைமுகம் அமைக்க தூர்வாரும் கட்டம்-5) பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதேபோல் இந்திய எரிவாயு ஆணையத்தால் (கெயில்) கொச்சி - கூத்தநாடு - பெங்களூரு - மங்களூரு எரிவாயுக்குழாய் - 2 திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி முதல் கோவை வரை 323 கிலோ மீட்டர் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டங்களுக்கும், சென்னை வல்லூரில் தரைவழி முனையத்துக்கான பொதுவழித்தடத்தில் ‘மல்டி புராடக்ட்’ குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

நான்கு வழிச்சாலை

தேசிய நெடுஞ்சாலை 332ஏ-வில் முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கிலோ மீட்டர் நீளத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த சாலை தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள துறைமுகங்களை இணைக்கும் உலக பாரம்பரிய தலமான மாமல்லபுரத்துக்கு இந்த திட்டம் சாலை இணைப்பை மேம்படுத்தும். அத்துடன் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை இது வழங்கும்.

மேற்கண்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments