ஆங்கில புத்தாண்டையொட்டி சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி இல்லாததால் ஏமாற்றம்




ஆங்கில புத்தாண்டையொட்டி சித்தன்னவாசலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போதிய வசதிகள் மற்றும் படகு சவாரி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றதுடன் திரும்பி சென்றனர்.

சுற்றுலா தலம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல் சுற்றுலா தலம் மிகவும் புகழ் பெற்றதாகும். இங்கு ஆங்கில புத்தாண்டையொட்டி குடும்ப சகிதங்களும், நண்பர்கள், சுற்றுலா பயணிகள் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும், பெண்களும் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். சில சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை மதிய உணவுடன் வந்து பொழுதை கழித்தனர்.

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் இங்குள்ள குகை ஓவியம், மலைமீது அமர்ந்த சமணர் படுகையான ஏழடி பட்டம் போன்றவற்றை கண்டு கழித்தனர். மேலும் சிறுவர் பூங்கா, விளையாட்டு சர்கல்கள், மண் யானைகள் போன்றவற்றில் விளையாடியும் செல்போன், கேமராக்களில் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.

படகு குளம்

சித்தன்னவாசல் வரும் சுற்றுலா பயணிகள் மலையின் அழகை ரசித்தவாறு படகு குளத்தில் குடும்ப சகிதங்களுடன் படகு சவாரி செய்வது வழக்கம். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக படகு குளத்தில் இருந்த படகுகள் அனைத்தும் சேதமடைந்து ஓரங்கட்டப்பட்டதாலும் போதிய தண்ணீர் இல்லாமல் உள்ளதாலும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்யாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளி விடுமுறைகளில் அதிக அளவு சித்தன்னவாசலுக்கு சுற்றுலா பயணிகளும் அவர்களுடன் சிறுவர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் சுற்றுலா தலத்தில் உள்ள விளையாட்டு பொருட்களில் அதிக அளவு உடைந்துள்ளதால் விளையாடுவதற்கு ஏற்றதாக இல்லை. இதனால் ஆர்வமுடன் சித்தன்னவாசல் வரும் சிறுவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

நீண்ட வரிசையில் வாகனங்கள்

அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் புதுக்கோட்டை, விராலிமலை, மணப்பாறை, திருச்சியிலிருந்து வந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. சித்தன்னவாசல் முழுவதும் அதிகமான 2, 4 சக்கர வாகனங்கள் டிக்கெட் வழங்கும் இடத்தில் வாகனங்கள் வரிசையில் அணிவகுத்து நின்றது.

சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் நுழைவுவாயிலில் ஜல்லிக்கட்டை போற்றும் விதமாக ஜல்லிக்கட்டு காளையை வீரர் ஒருவர் அடக்குவது போன்று சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஜல்லிக்கட்டு காளையின் சிலை அருகில் நின்று தங்களது செல் போன்களில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்ததால் பிரச்சினைகள் ஏற்படாமலும் திருட்டு போன்ற குற்ற செயல் ஏற்படாமல் இருக்க அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

உணவு அறை அமைக்க வேண்டும்

இதுகுறித்து சுற்றுலாபயணிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

திருச்சியை சேர்ந்த கனிமொழி:- சுற்றுலாதலத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எங்களை போன்ற வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் காலை முதல் மாலை வரை இங்கேயே பொழுதை களிக்கின்றோம். எங்களுக்கு தேவையான உணவுகள் உள்ளே கிடைக்கவில்லை. கொண்டுவந்து சாப்பிடுவதற்கு உணவு அறை இல்லை, மற்ற இடங்களில் அமர்ந்து சாப்பிடும் போது குரங்குகள் உணவுகளை பிடிங்கி சென்றுவிடுகின்றன. நல்ல உணவகம் அமைக்க வேண்டும் அல்லது உணவை அமர்ந்து சாப்பிடுவதற்கு உணவுஅறை அமைக்க வேண்டும்

புதிய படகுகளை இயக்க வேண்டும்

கீரனூரை சேர்ந்த பவித்ரா:- படகு குளத்தில் உள்ள அனைத்து படகுகளும் உடைந்து ஓரம்கட்டி கிடக்கின்றது. படகு குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றது. இதனால் படகு சவாரி செய்ய முடியாமல் எங்களை போன்று பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே உடைந்து கிடக்கும் படகுக்கு பதிலாக புதிய படகுகளை இயக்க வேண்டும். படகு குளத்தில் தண்ணீர் நிரப்பி படகு சவாரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இசை நீரூற்றை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதலாக விளையாட்டு பொருட்கள்

விராலிமலையை சேர்ந்த சிறுவன் ராஜா:- பூங்காவில் விளையாடுவதற்கு உண்டான பல பொருட்கள் உடைந்து கிடக்கிறது. இதனால் எங்களால் விளையாட முடியவில்லை. எனவே விளையாடுவதற்கென ஒரே சருக்கல் மட்டுமே உள்ளது. எனவே இன்னும் பல்வேறு விதமான விளையாட்டு பொருட்களை கூடுதலாக சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கீரமங்கலம்

கீரமங்கலத்தில் பிரமாண்ட சிவன் சிலை கொண்டுள்ள தடாகத்தின் அருகே சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் தங்கள் குழந்தைகளை சிறுவர் பூங்காவில் விளையாட வைத்து மகிழ்ந்தனர். இதில் ஏராளமான குழந்தைகள் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments