தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.635 கோடியில் காற்றுமாசு ஏற்படுத்தாத 1,666 புதிய பஸ்கள் முதல்கட்டமாக 100 பஸ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்




தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ரூ.635 கோடியில் காற்றுமாசு ஏற்படுத்தாத 1,666 புதிய பிஎஸ் 6 ரக பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதில் முதல் கட்டமாக 100 பஸ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தடையற்ற சேவை

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது. அதோடு அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பஸ் பயண வசதியை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணச் சலுகை, சாதாரண நகர கட்டண பஸ்களில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்காக விடியல் பயண திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பஸ் வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பஸ்களை புதுப்பித்தல், புதிய பஸ்களை கொள்முதல் செய்தல், பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அறிவிப்புகள்

19.10.2022 அன்று சட்டசபையில் 110-விதியின் கீழ் முதல்-அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் பஸ் பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருவகிறது; ரூ.500 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்படும்; அடிச்சட்டம் (சேசிஸ்) நல்ல நிலையில் உள்ள ஆயிரம் பழைய பஸ்கள் புதுப்பிக்கப்படும் என்று கூறினார். 2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ரூ.500 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 500 பழைய பஸ்கள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி நீலகிரி மாவட்டத்திற்கென மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 புதிய பஸ்கள் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

1,666 பஸ்கள்

அந்த அறிவிப்புகளின்படி, பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலும், அரசு போக்குவரத்து கழகங்களில் புதிய பஸ்களை இயக்கிடும் வகையிலும். 634.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 1,666 பிஎஸ் 6 ரக பஸ்களை (காற்றுமாசு ஏற்படுத்தாது) கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் முதற்கட்டமாக. விழுப்புரம் மற்றும் கோவை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தலா 40 புதிய பஸ்களும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 10 புதிய பஸ்களும், நெல்லை மற்றும் மதுரை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தலா 5 புதிய பஸ்களும் என மொத்தம் 100 புதிய பிஎஸ் 6 ரக பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மத்திய பணிமனையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மீதமுள்ள பஸ்கள் அடுத்த 2 மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன.

அமைச்சர்கள்

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குனர்கள், தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொருளாளர் நடராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments