புதுக்கோட்டைமாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி




புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. வாக்காளர் உறுதிமொழியான, "மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்'' என்ற உறுதிமொழியினை, கலெக்டர் வாசிக்க அதனை பின்தொடர்ந்து, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், தனி தாசில்தார் (தேர்தல்) சோனை கருப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அன்னவாசல்

அன்னவாசல் அருகே புல்வயல் அரசு உயர் நிலைப்பள்ளியில் வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் முருகன் தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும், எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

விராலிமலை

விராலிமலை தாலுகா அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தாசில்தார் கருப்பையா தலைமையில், அலுவலர்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதில் தலைமையிடத்து துணை தாசில்தார் பழனிச்சாமி, வட்ட வழங்கல் அலுவலர் சரவணகுமார், தேர்தல் துணை தாசில்தார் ஐஸ்வர்யா உள்பட அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் விராலிமலை அருகே வடுகப்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

அரசு வேளாண்மை கல்லூரி

குடுமியான்மலை அரசு வேளாண்மைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் நக்கீரன் தலைமை தாங்கினார். இதில் வேளாண்மை கல்லூரி மாணவ-மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு தனிநபர் வாக்குரிமையின் முக்கியத்துவம் பற்றி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments