புதுக்கோட்டை அருகே கார்-சரக்கு வேன் மோதல்; தம்பதி பலி திருவண்ணாமலை ேகாவிலுக்கு சென்ற போது பரிதாபம்




திருவண்ணாமலை கோவிலுக்கு சென்ற போது, புதுக்கோட்டை அருகே கார், சரக்கு வேன் மோதியதில் தம்பதி பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

சரக்கு வேன்-கார் மோதல்

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 60). இவரது மனைவி உமாமகேஸ்வரி (46). இவர்களது மகன் பிரவீன் சுந்தர். இவர்கள் 3 பேரும் நேற்று காலை திருவண்ணாமலை கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பிரவீன் சுந்தர் ஓட்டினார். புதுக்கோட்டை மாவட்டம், சத்தியமங்கலம் அருகே திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றது.

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் அருகே சத்தியமங்கலம் நெடுஞ்சேரி பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் கவுதம்ராஜ் (20) என்பவர் சரக்கு வேனில் தண்ணீர் டேங்கில் தண்ணீர் நிரப்பி அப்பகுதியில் விற்பனைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது சரக்கு வேனும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. அதில் கார், சரக்கு வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

தம்பதி பலி

இந்த விபத்தில் வாகனங்களுக்குள் 4 பேரும் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதையடுத்து அங்கு வந்த வெள்ளனூர் போலீசார் பொதுமக்களின் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தன் உயிரிழந்தார்.

இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உமா மகேஸ்வரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பிரவீன் குமார், கவுதம்ராஜ் ஆகிய 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சோகம்

இதற்கிடையே உயிரிழந்த கோவிந்தன்-உமாமகேஸ்வரியின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் சென்ற தம்பதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments