கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் மாயம்




கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 4 பேர் மாயமானார்கள்.

மீனவர்கள் மாயம்

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த அமீர் சுல்தான் மகன் சாகுல் ஹமீது என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த பஷீர் மைதீன் மகன் ராஜா (வயது 41), சுல்தான் கனி மகன் அசார் (35), முகமது சாதிக் மகன் இஸ்மாயில் (38), பாலு மகன் சுப்பிரமணியன் (40) ஆகிய 4 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

தேடும் பணியில்...

இந்நிலையில் மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடித்துக் கொண்டு நேற்று கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் வெகு நேரமாகியும் மீனவர்கள் கரை திரும்ப வில்லை. இதனால் மீனவர்கள் நிலைமை என்னவென்று தெரியாமல் உறவினர்கள் மற்றும் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் காணாமல் போன மீனவர்களை தேடி ஒரு விசைப்படகு மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் கரை திரும்பாத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments