வலையில் சிக்கும் அபூர்வ வகை உயிரினமான கடற்பசுவை கடலுக்குள் விடும் மீனவர்களுக்கு பரிசு-சான்றிதழ் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் பேச்சு




வலையில் சிக்கும் அபூர்வ வகை உயிரினமான கடற்பசுவை கடலுக்குள் விடும் மீனவர்களுக்கு பரிசு-சான்றிதழ் வழங்கப்படும் என்று பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் கூறினார்.

விழிப்புணர்வு கூட்டம்

சேதுபாவாசத்திரம் அருகே புதுப்பட்டினத்தில் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டம் சார்பில் மீனவர்களுக்கு கடல் பசு பாதுகாப்பு தொடர்பான சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் பேசுகையில், அபூர்வ வகை கடல் வாழ் உயிரினமான கடற்பசு, கடல் வளத்தை பாதுகாக்கும் முக்கியமான உயிரினமாக திகழ்கிறது. இப்பகுதியில் காணப்படும் இந்த அபூர்வ உயிரினத்தை காப்பாற்றும் வகையில் மனோரா பகுதியை தலைமை இடமாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.

ரொக்கப்பரிசு

கடற்பசுவை காப்பாற்றி உயிருடன் கடலில் விட்ட மீனவர்களை பாராட்டுகிறேன். கடற்பசுவின் முக்கியத்துவத்தை உணர்ந்து மீனவர்கள் அனைவரும் அதனை பாதுகாக்க வேண்டும். வலையில் சிக்கிய அபூர்வ வகை கடல்வாழ் உயிரினமான கடற்பசுவை காப்பாற்றி கடலுக்குள் விடும் மீனவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும் என்றார்.

இதில் நாட்டுப்படகு சங்க தலைவர் ஜெயபால், ஊராட்சி தலைவர்கள் அமீர்முகைதீன், ரகமத்துல்லா, ஓம்கார் பவுண்டேஷன் அன்பு, வனவர் சிவசங்கர், வனக்காப்பாளர்கள் சபரிநாதன், மணவாளன், கிராம மீனவ தலைவர்கள், மீனவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கழுமங்குடா, செந்தலைவயல், கணேசபுரம், வள்ளுவர்புரம், சோமநாதபட்டினம் ஆகிய மீனவ கிராமங்களில் கடற்பசு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments