ராமேசுவரம் அருகே விசைப்படகு பழுது: புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் பத்திரமாக மீட்பு




ராமேசுவரம் அருகே விசைப்படகு பழுதானதால் கடலில் சிக்கி தவித்த புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

விசைப்படகு

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த அமீர் சுல்தான் மகன் சாகுல் ஹமீது என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த ராஜா (வயது 41), சுப்பிரமணியன் (40), இஸ்மாயில் (38), அசார் (35) ஆகிய 4 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மீனவர்கள் மாயம்

இவர்கள் நேற்று முன்தினம் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் வெகு நேரமாகியும் மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் மீனவர்கள் நிலைமை என்னவென்று தெரியாமல் உறவினர்கள் மற்றும் மீனவர்கள் கவலை அடைந்தனர். இதையடுத்து, காணாமல் போன மீனவர்களை தேடி ஒரு விசைப்படகு மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மேலும், கடலோர காவல் குழுமத்தினர் ரோந்து படகு மூலம் மீனவர்களை தேடி சென்றனர்.

இதேபோல் புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் காணவில்லை என்று அருகே உள்ள மாவட்டங்களுக்கு மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் குழுமத்தினர் தகவல் தெரிவித்தனர்.

4 பேர் மீட்பு

இந்தநிலையில் புதுக்கோட்டை மீனவர்களின் விசைப்படகு ராமேசுவரம் அருகே பழுதாகி நின்றதை கண்ட ராமேசுவரம் மீனவர்கள் இதுகுறித்து கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இங்கிருந்து தேடிச்சென்ற விசைப்படகுக்கு ஜி.பி.எஸ். மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற மீனவர்கள், மாயமான புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் அவர்களது விசைப்படகையும் கயிறு மூலம் கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.

மாயமான 4 மீனவர்களும் கரை திரும்பியதால் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments