சேலம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் & தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் இரு கல்லூரி மாணவர்கள் பலி 3 பேர் காயம்




சேலம் அருகே கார்- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர்.

கார்- மோட்டார் சைக்கிள் மோதல்

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஹனிபா (வயது 22). தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் (22). நண்பர்களான இருவரும் திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தனர்.

இந்த நிலையில் ஹனிபா, இஸ்மாயில் உள்பட 5 மாணவர்கள் திருப்பத்தூர் அருகே உள்ள ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்வதற்காக 3 மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்டனர்.

ஹனிபாவும், இஸ்மாயிலும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஹனிபா ஓட்டினார். இஸ்மாயில் பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் நேற்று மதியம் சேலம் அருகே அரூர் மெயின் ரோடு சுக்கம்பட்டி கோமாளி வட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக ஹனிபா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது.

2 மாணவர்கள் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் ஹனிபா, இஸ்மாயில் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். அவரது உடல்களை பார்த்து சக மாணவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. மேலும் மோதிய வேகத்தில் கார் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. அதில் காருக்குள் இருந்த 3 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் காரில் இருந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

போலீசார் விசாரணை

இதை தொடர்ந்து விபத்தில் பலியான மாணவர்கள் ஹனிபா, இஸ்மாயில் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள், கார் மோதி கொண்ட விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments