‘டார்ச் லைட்’ அடித்து ரெயில் விபத்தை தடுத்த தென்காசி தம்பதிக்கு ரூ.5 லட்சம் பரிசு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்




‘டார்ச் லைட்’ அடித்து ரெயில் விபத்தை தடுத்து நிறுத்திய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வயதான தம்பதிக்கு ரூ.5 லட்சத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ரெயில் விபத்தை தடுத்த தம்பதி

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம், புளியரை கிராமம், ‘எஸ்'-வளைவு என்ற தமிழக-கேரள எல்லை பகுதியில் 25-2-2024 அன்று நள்ளிரவு 1 மணி அளவில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்தில் இருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை-கொல்லம் ரெயில் மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

அப்போது அப்பகுதியில் வசித்து வந்த சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினர் செங்கோட்டையில் இருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்பு பயணிகள் ரெயில் வரும் சத்தத்தை கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த ‘டார்ச் லைட்' ஒளியின் மூலம் ரெயில் ஓட்டுனரிடம் சைகை காண்பித்து, ரெயிலை நிறுத்தி ஏற்படவிருந்த பெரும் ரெயில் விபத்தை தடுத்துள்ளனர்.

ரூ.5 லட்சம்

உடனடியாக தகவல் அறிந்து போலீஸ் துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தி உள்ளனர். மேலும் சென்னையில் இருந்து கொல்லம் நோக்கிச்சென்ற விரைவு ரெயிலும் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதை தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரெயிலை நிறுத்திய சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீர செயலை பாராட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் வழங்கினார்

இதற்கிடையே சென்னை தலைமைச்செயலகத்தில் சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதியின் வீரதீர செயலை பாராட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

அப்போது தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா உடனிருந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments