3-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்




தமிழகத்தில் வருகிற 3-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. 43 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட இருக்கிறார்கள்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும்.

இந்த மையங்களில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு...

சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

சமீபத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் டாக்டர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3,000-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.

பஸ்-ரெயில் நிலையங்களில்...

முக்கிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களிலும் (பயண வழி மையங்கள்) சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு தொடர்ந்து 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்கவைத்துக்கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments