திருச்சி அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் பலி




திருச்சி அருகே லாரி, மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில், பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

விடுதியில் தங்கி படித்தனர்

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் வல்லரசு (வயது 20). இவரும், அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூரை சேர்ந்த நாட்டான் மகன் லெனின் (21), சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ரெங்கநாதன் (21) ஆகியோரும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தனர். இதையொட்டி அவர்கள் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணியளவில் பல்கலைக்கழக விடுதியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அருகே சென்றபோது எதிரே திருச்சியில் இருந்து புதுக்கோட்டையை நோக்கி, வேலூரை சேர்ந்த கோபி (31) என்பவர் ஓட்டி வந்த சிமெண்டு லாரி வந்தது. போலீஸ் நிலையம் எதிரே பேரிகார்டு வைக்கப்பட்டிருந்ததால் அந்த லாரி சற்று மெதுவாக வந்து கொண்டிருந்தது.

3 மாணவர்கள் பலி

அப்போது மாணவர்கள் வந்த மோட்டார் சைக்கிளும், லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் தலையில் பலத்த காயமடைந்த 3 மாணவர்களும் ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்தனர். இதையறிந்த மாத்தூர் போலீசார் உடனடியாக அங்கு வந்து, 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது வல்லரசு, ரெங்கநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து லெனினை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லெனினும் உயிரிழந்தார்.

சோகம்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கீரனூர் சரக துணை ேபாலீஸ் சூப்பிரண்டு செங்கோட்டுவேலன், மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கோபியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments