விதிமுறைகளை வெளியிட்டது, மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது




குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் வெளியானதை தொடர்ந்து, அச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

ஜனாதிபதி ஒப்புதல்

கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் திருத்தங்கள் ெசய்து, கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.


இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதஅடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இம்மசோதா வகை செய்கிறது.

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம், இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைேவற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்றது.

போராட்டம்

ஜனாதிபதி ஒப்புதல் பெற்று 6 மாதங்களுக்குள் சட்டத்துக்கான விதிமுறைகளை வெளியிட்டால்தான், அச்சட்டம் அமலுக்கு வரும். ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சில மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

எனவே, விதிமுறைகள் வெளியிடப்படவில்லை. சட்டமும் அமல்படுத்தப்படவில்லை.

இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். அதையடுத்து இதற்கான பணிகள் வேகம் எடுத்தன.

விதிமுறைகள் வெளியீடு

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்துடன், அச்சட்டம் அமலுக்கு வந்து விட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

3 நாடுகளில் இருந்து வந்த மேற்கண்ட மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் பணியை மத்திய அரசு தொடங்கும். இதற்கென பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

எவ்வித ஆவணமும் இல்லாமல், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு வந்தவர்கள் அதில் விண்ணப்பிக்க வேண்டும். எந்த ஆண்டு வந்தனர் என்பதை குறிப்பிட வேண்டும். அவர்களிடம் எந்த ஆவணமும் கேட்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

முக்கிய வாக்குறுதி

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 4 ஆண்டுகள் கழித்து, குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களே இருக்கும்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டம், கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், மேற்கு வங்காள சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதாவின் முக்கிய வாக்குறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்காளத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு இது உதவியதாக பா.ஜனதா தலைவர்கள் கருதுகிறார்கள்.

ஏற்கனவே கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டப்படி, இந்திய குடியுரிமை வழங்க 30 மாவட்ட கலெக்டர்களுக்கும், 9 மாநிலங்களின் உள்துறை செயலாளர்களுக்கும் மத்திய அரசு அதிகாரம் வழங்கி இருந்தது.

அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அதே ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிவரை மொத்தம் 1,414 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments